

திண்டுக்கல்: கோடை கொண்டாட்டத்தை முன்னிட்டு, கொடைக்கானல் அருகே மன்னவனூரில் நடந்த ராட்சத காற்றாடி திருவிழா சுற்றுலா பயணிகளை வெகுவாக கவர்ந்தது.
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் கோடை விழா மற்றும் 62-வது மலர் கண்காட்சி வரும் மே 24-ம் தேதி தொடங்கி, ஜூன் 1-ம் தேதி வரை மொத்தம் 9 நாட்கள் நடைபெற உள்ளது. இதையொட்டி முன்கூட்டியே கோடை கொண்டாட்டம் என்ற பெயரில் சுற்றுலா பயணிகளை மகிழ்விக்க, திண்டுக்கல் மாவட்ட நிர்வாகம், சுற்றுலாத்துறை இணைந்து பாரா செயிலிங், லேஷர் லைட் ஷோ, ஆடல் பாடல் என பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறது.
அதன் ஒரு பகுதியாக, கொடைக்கானல் மேல்மலை கிராமமான மன்னவனூர் ஏரிப்பகுதியில் ராட்சத காற்றாடி (பட்டம்) திருவிழா இன்று (மே 22) கோலாகலமாக தொடங்கியது. இந்நிகழ்ச்சியில் பஞ்சவர்ணகிளி, மீன், தேசிய கொடி, வன விலங்குகள் வானத்தில் பறப்பது போல, பல விதமான ராட்சத பட்டங்கள் பறக்கவிடப்பட்டன.
திருவிழாவில் பங்கேற்ற ஏராளமான சுற்றுலா பயணிகள் வானத்தில் பறந்த வண்ணமயமான பட்டங்களின் அழகை கண்டு ரசித்தனர். மே 25-ம் தேதி வரை காலை 9 முதல் மாலை 5 மணி வரை காற்றாடிகள் பறக்க விடப்படும். இதில் பங்கேற்க பொதுமக்கள், சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி இலவசம். இங்கு, காற்றின் வேகம், வானிலையைப் பொறுத்து காற்றாடிகள் பறக்கவிடப்படுகின்றன.