“சமூக நீதியைப் பற்றி என்னால் மட்டுமே பேச முடியும்” - ராமதாஸ் 

ராமதாஸ் | கோப்புப்படம்
ராமதாஸ் | கோப்புப்படம்
Updated on
1 min read

விழுப்புரம்: “என்னுடைய உழைப்பால், போராட்டத்தால், வன்னியர் சமூகம் மட்டுமின்றி எம்பிசி பிரிவில் உள்ள 115 சமூகத்தினரும் பயன் பெற்றுள்ளனர். சமூக நீதியை பற்றி என்னால் மட்டுமே பேச முடியும். மற்றவர்களால் பேச முடியாது, அதைப்பற்றி அவர்களுக்கு தெரியாது” என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.

உட்கட்சி மோதலில், பாமக நெருக்கடியை சந்தித்து வரும் நிலையில், நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்துக்கு நிறுவனர் ராமதாஸ் அழைத்து விடுத்திருந்தார். அதன்படி, விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த தைலாபுரத்தில் கடந்த 16-ம் தேதி மாவட்டத் தலைவர்கள், செயலாளர்கள் கூட்டமும், மறுநாள் (மே 17) மகளிரணி, இளைஞர் அணி, மாணவரணி கூட்டமும் மற்றும் 19-ம் தேதி வன்னியர் சங்க நிர்வாகிகள் கூட்டமும் நடைபெற்றது.

இம்மூன்று கூட்டங்களையும் புறக்கணித்த தலைவர் அன்புமணி ராமதாஸ் மற்றும் அவரது ஆதரவாளர்கள், தைலாபுரத்தில் இன்று (மே 21) நடைபெற்ற சமூக நீதிப் பேரவைக் கூட்டத்தையும் புறக்கணித்தனர். நிறுவனர் ராமதாஸ் தலைமை வகித்த 4 கூட்டங்களிலும், கவுரவத் தலைவர் ஜி.கே.மணி உள்ளிட்ட ஒரு சில முக்கிய நிர்வாகிகள் மட்டுமே தொடர்ச்சியாக கலந்து கொண்டுள்ளனர். நான்கு கூட்டங்களையும் அன்புமணி ராமதாஸ் தொடர்ந்து புறக்கணித்துள்ளது பாமகவில் அதிர்வலையை ஏற்படுத்தி உள்ளது.

இந்தக் கூட்டத்தில் செய்தியாளர்களைச நிறுவனர் ராமதாஸ் கூறும்போது, “முந்தைய காலத்தில் வன்னியர் சமுதாயத்தில், ஊருக்கு ஒருவர் கூட படிக்காமல் இருந்தனர். பத்திரத்தில் கையொப்பமிட வேண்டும் என்றால், இடது கை பெருவிரல் ரேகையை வைத்தனர். இப்படிப்பட்ட சமுதாயத்தில், ஆயிரமாயிரம் வழக்கறிஞர்களை உருவாக்கி இருக்கிறேன். நீதிபதிகளையும் உருவாக்கி இருக்கிறேன். இவர்கள் அனைவரும் மிகவும் பிறப்படுத்தப்பட்டோர் பிரிவில், இடஒதுக்கீட்டில் படித்தவர்கள்.

என்னுடைய உழைப்பால், போராட்டத்தால், வன்னியர் சமூகம் மட்டுமின்றி எம்பிசி பிரிவில் உள்ள 115 சமூகத்தினரும் பயன் பெற்றுள்ளனர். சமூக நீதியை பற்றி என்னால் மட்டுமே பேச முடியும். மற்றவர்களால் பேச முடியாது, அதைப்பற்றி அவர்களுக்கு தெரியாது. நீதித்துறையில் இட ஒதுக்கீடு வேண்டும். நீதிமன்றங்களில் சமூக நீதி இல்லை.

இனிமேல் நடைபெறும் கூட்டங்களில் அன்புமணி கலந்துகொள்வார். எனக்கும், அன்புமணிக்கும் மனகசப்பு என எப்போதும் நான் சொல்வதில்லை. இனிப்பான செய்திகளைதான் சொல்லி இருக்கிறேன். நான் மருத்துவராக இருந்தாலும், கசப்பான மருந்து கொடுப்பதில்லை. இனிப்பான மருந்துதான் கொடுப்பேன். தைலாபுரத்தில் வரும் 25-ம் தேதி சமூக முன்னேற்ற சங்க கூட்டம் நடைபெறும், அப்போது இது குறித்து பேசுகிறேன்,” என்றார். நீச்சல் வீடியோ குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், “சிங்கத்தின் கால்கள் பழுதும் படவில்லை, சீற்றமும் குறையவில்லை. கால்கள் பழுதுபடாததால் நீச்சல் அடித்துள்ளேன்,” என்று அவர் கூறினார்.

இந்தச் சந்திப்பில், அன்புமணி ராமதாஸ் தொடர்பான கேள்விகளுக்கு எந்தவொரு உறுதியான பதிலையும் ராமதாஸ் அளிக்கவில்லை. இது இருவருக்கும் இடையே நீடித்து வரும் பூசல்களுக்கு தீர்வு எட்டபடாமல் இருப்பதை உணர்த்துவதாக கூறப்படுகிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in