

சென்னை: தமிழ்நாட்டுக்கான நியாயமான நிதி உரிமையை நிதிஆயோக் கூட்டத்தில் வெளிப்படுத்த 24-ம் தேதி டெல்லி செல்கிறேன். பாஜகவுடன் கூட்டணி கிடையாது என்று அடித்துச் சொன்ன நாக்கின் ஈரம் காய்வதற்குள், ஒரே ரெய்டில் புலிகேசியாக மாறி வெள்ளைக்கொடி ஏந்தச் சென்ற, பழனிசாமி என்னைப் பார்த்து வெள்ளைக் கொடி ஏந்தியதாகப் பேச நா கூசவில்லையா?, என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
இதுதொடர்பாக முதல்வர் ஸ்டாலின் தனது சமூகவலைதளப் பக்கத்தில், “தமிழ்நாட்டுக்கான நியாயமான நிதி உரிமையை நிதிஆயோக் கூட்டத்தில் வெளிப்படுத்த 24-ம் தேதி டெல்லி செல்கிறேன். சசிகலா முதல் அமித்ஷா வரை ஆள் மாறினாலும், டேபிளுக்கு அடியில் காலைப் பிடிக்கும் பழக்கம் மாறாத எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமிக்கு இதனைக் கண்டு ஏன் வலிக்கிறது?“பாஜகவுடன் கூட்டணி கிடையாது” என்று அடித்துச் சொன்ன நாக்கின் ஈரம் காய்வதற்குள், ஒரே ரெய்டில் ‘புலிகேசி’யாக மாறி ‘வெள்ளைக்கொடி ஏந்தச் சென்ற’ பழனிசாமி என்னைப் பார்த்து வெள்ளைக் கொடி ஏந்தியதாகப் பேச நா கூசவில்லையா?
இந்த ஸ்டாலினின் கை கருப்பு சிவப்புக் கழகக் கொடியை ஏந்தும் கை. பேரறிஞரால் தூக்கிவிடப்பட்ட கை. கருணாநிதியின் கரம் பற்றி நடந்த கை. எந்நாளும் உரிமைக் கொடியைத்தான் ஏந்துவேன்,ஊர்ந்து போகமாட்டேன். இன்றைக்குக் கூட, தமிழ்நாட்டின் உரிமைக்காக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளேன்.கொண்ட கொள்கையில் உறுதியாக நிற்பேன், தமிழ்நாட்டுக்கான நிதியைப் போராடிப் பெறுவேன்,” என்று முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.