அங்கீகாரம் பெறாத மனை பிரிவுகளை வரன்முறைப்படுத்த 2026 ஜூன் 30 வரை அவகாசம்

அங்கீகாரம் பெறாத மனை பிரிவுகளை வரன்முறைப்படுத்த 2026 ஜூன் 30 வரை அவகாசம்
Updated on
1 min read

சென்னை: அங்கீகாரம் பெறாத மனைப்பிரிவுகளை வரன்முறைப்படுத்தும் திட்டத்தின்கீழ் அங்கீகாரம் பெறுவதற்கான கால அவகாசம் அடுத்தாண்டு ஜூன் 30-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2016-ம் ஆண்டு அக்.20ம் தேதி அன்று அல்லது அதற்கு முன் அனுமதியற்ற மனைப்பிரிவு ஏற்படுத்தப்பட்டு, அதில் குறைந்தபட்சம் ஒரு மனையாவது விற்கப்பட்டு, அதற்கான விற்பனை பத்திரம் 2016 அக்.20-ம் தேதி அல்லது அதற்கு முன் பதிவு செய்யப்பட்டிருந்தால், அந்த மனைப்பிரிவில் விற்கப்பட்ட, விற்கப்படாத அனைத்து மனை மற்றும் மனைப்பிரிவுகளை வரன்முறைப்படுத்த கடந்த 2017 நவ.3-ம் தேதி வரை 6 மாதம் அவகாசம் அளிக்கப்பட்டது. அதன்பின், 2018 நவ.16 வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டது.

அதன்பின், பல்வேறு வகைகளில் சலுகைகளும் அளிக்கப்பட்டன. அதன்பின், 2024 பிப்.29-ம் தேதி வரை கால நீட்டிப்பு செய்யப்பட்டது. இந்நிலையில், நகர ஊரமைப்பு இயக்குநர் அரசுக்கு கடந்த ஜனவரி மாதம் அனுப்பிய கடிதத்தில், இத்திட்டத்தை ஏற்கெனவே வெளியிடப்பட்ட அனைத்து விதிகளுக்கும் உட்பட்டு எவ்வித மாற்றமும் இன்றி இணையவழி மூலம் விண்ணப்பித்து, இத்திட்டத்தில் அமையும் மனை மற்றும் மனைப்பிரிவுகளை வரன்முறைப்படுத்திக் கொள்ள மேலும் 12 மாதங்களுக்கு நீட்டிப்பு வழங்க அரசிடம் கோரிக்கை விடுத்தார்.

இந்த கருத்துருவை தமிழக அரசு கவனமாக பரிசீலித்து, வரன்முறை கோரி விண்ணப்பிப்பதற்கான கால அவகாசத்தை, விதிகளுக்கு உட்பட்டு வரும் 2026 ஜூன் 30-ம் தேதி வரை நீட்டித்து உத்தரவிட்டுள்ளது. இத்திட்டத்தில் இணைய வழிமூலம் மட்டுமே மனை மற்றும் மனைப்பிரிவுகளை வரன்முறைப்படுத்த விண்ணப்பிக்க முடியும்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in