Published : 11 May 2025 05:35 AM
Last Updated : 11 May 2025 05:35 AM
நாம் தமிழர் கட்சிக்கு மீண்டும் விவசாயி சின்னத்தை இந்திய தேர்தல் ஆணையம் ஒதுக்கியுள்ளதாக சீமான் தெரிவித்துள்ளார். ஒதுக்கப்பட்ட விவசாயி சின்னத்தில் கரும்புக்கு பதிலாக ஏர் கலப்பை இடம்பெற்றுள்ளது.
நாம் தமிழர் இயக்கமாக இருந்ததை, கடந்த 2010-ம் ஆண்டு நாம் தமிழர் கட்சியாக மாற்றி, கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளராக சீமான் செயல்பட்டு வருகிறார். நாம் தமிழர் கட்சி, இதுவரை போட்டியிட்ட அனைத்து தேர்தல்களிலும் தோல்வியை சந்தித்து வந்தாலும், வாக்கு சதவீதம் மட்டும் ஒவ்வொரு முறையும் அதிகரித்து வந்துள்ளது.
அதேநேரத்தில் அங்கீகரிக்கப்படாத கட்சியாகவும் இருந்து வந்தது. தேர்தல் ஆணைய விதிப்படி, அங்கீகரிக்கப்பட்ட கட்சியாக மாற, சட்டப்பேரவை தேர்தலில் 6 சதவீத வாக்குகளுடன் 2 சட்டப்பேரவை தொகுதிகளில் வெற்றிப் பெற வேண்டும். அல்லது சட்டப்பேரவைத் தொகுதிகளில் மொத்த தொகுதிகளில் 3 சதவீத இடங்களை பெற வேண்டும். அல்லது மக்களவைத் தேர்தலில் 6 சதவீத வாக்குகளுடன் ஒரு மக்களவை தொகுதியில் வெற்றிப் பெற வேண்டும். அல்லது 8 சதவீத வாக்குகளை பெற வேண்டும். இந்நிலையில், கடந்த சட்டப்பேரவை தேர்தலில் நாம் தமிழர் கட்சி 6.58 சதவீத வாக்குகளை மட்டும் பெற்றது. இதனால் அக்கட்சிக்கு அங்கீகாரம் கிடைக்கவில்லை. இதனால், அக்கட்சியின் கரும்பு விவசாயி சின்னம் பறிபோனது மட்டுமில்லாமல், மக்களவைத் தேர்தலில் அவர்கள் கேட்ட சின்னமும் கிடைக்கவில்லை. ‘மைக்’ சின்னம் கிடைத்தது.
இந்நிலையில், கடந்த மக்களவைத் தேர்தலில் 8.22 சதவீத வாக்குகளை பெற்று அங்கீகரிக்கப்பட்ட கட்சி என்ற அந்தஸ்துக்கு நாம் தமிழர் உயர்ந்தது. இதையடுத்து, கடந்த ஜனவரி மாதம் நாம் தமிழர் கட்சிக்கு மாநில கட்சி அங்கீகாரத்தை தேர்தல் ஆணையம் வழங்கியது. இதனால், விவசாயி அல்லது புலி சின்னம் தங்களுக்கு ஒதுக்க வேண்டும் என நாம் தமிழர் கட்சி சார்பில் தேர்தல் ஆணையத்திடம் முறையிடப்பட்டது.
ஆனால், அந்த சின்னம் வேறு மாநில கட்சியான பாரதிய மக்கள் ஐக்கிய கட்சிக்கு ஒதுக்கப்பட்டிருந்ததால் நாம் தமிழர் கட்சிக்கு அச்சின்னத்தை ஒதுக்க முடியாது என தேர்தல் ஆணையம் அறிவித்தது. இந்நிலையில், விவசாயி சின்னத்தில் மாற்றங்கள் செய்து வழங்கினால் அச்சின்னத்தை ஒதுக்க பரிசீலிக்கப்படும் என தேர்தல் ஆணையம் தெரிவித்ததாக கூறப்படுகிறது.
இதையடுத்து, நாம் தமிழர் கட்சி சார்பில் ஏற்கெனவே இருந்த கரும்பு விவசாயி சின்னத்தில் சிறிய மாற்றம் செய்து, கரும்புக்கு பதிலாக ஏர் கலப்பையுடன் விவசாயி இருப்பதுபோல் சின்னம் வடிவமைக்கப்பட்டு தேர்தல் ஆணையத்தில் வழங்கப்பட்டது. இந்நிலையில், ஏர் கலப்பை விவசாயி சின்னத்தை நாம் தமிழர் கட்சிக்கு ஒதுக்கீடு செய்து தேர்தல் ஆணையம் மே.10-ம் தேதி அறிவித்ததாக நாம் தமிழர் கட்சி சீமான் தனது எக்ஸ் தளத்தில் தெரிவித்துள்ளார். நாம் தமிழர் கட்சிக்கு மீண்டும் விவசாயி சின்னம் ஒதுக்கப்பட்டிருப்பதால் தொண்டர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT