Published : 04 May 2025 12:33 AM
Last Updated : 04 May 2025 12:33 AM

சென்னையில் இருந்து இலங்கைக்கு தீவிரவாதிகள் தப்பினார்களா? - மர்ம இமெயிலால் பரபரப்பு

கோப்புப் படம்

சென்னை: சென்னையில் இருந்து கொழும்பு புறப்பட்ட விமானத்தில் தீவிரவாதிகள் இருப்பதாக வந்த இமெயிலால் பரபரப்பு ஏற்பட்டது.

சென்னையில் இருந்து நேற்று காலை 10.26 மணிக்கு இலங்கை தலைநகர் கொழும்புக்கு 229 பயணிகளுடன் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம் புறப்பட்டது. இதற்கிடையில், காலை 11 மணி அளவில், சென்னை விமான நிலைய இயக்குநர் அலுவலகத்துக்கு வந்த ஒரு இமெயிலில், மேற்கூறிய விமானத்தில், காஷ்மீரில் பயங்கரவாத செயலில் ஈடுபட்ட 6 தீவிரவாதிகள் பயணம் செய்கின்றனர். அவர்களிடம் வெடிகுண்டுகள் உள்ளிட்ட ஆயுதங்கள் இருப்பதாக குறிப்பிடப்பட்டிருந்தது.

இதையடுத்து, சென்னை விமான நிலையத்தில் இருந்து, கொழும்பு பண்டாரநாயகா சர்வதேச விமான நிலையத்துக்கு அவசரமாக தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனடியாக கொழும்பு விமான நிலையத்தில் முழு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. பகல் 11.59 மணி அளவில் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம் கொழும்பு விமான நிலையத்தில் தரையிறங்கியதும், பாதுகாப்பு படையினர், அதிரடிப் படையினர், விமானத்தை சுற்றி வளைத்து தீவிர சோதனை நடத்தினர். பயணிகள் ஒவ்வொருவரையும் தனித்தனியாக சோதனை நடத்தி, அவர்களின் விவரங்களை சேகரித்தனர். சோதனை முடிவில், தீவிரவாதிகள் யாரும் இல்லை என்பது உறுதியானது. இதனால் சென்னை விமான நிலையத்திலும், கொழும்பு விமான நிலையத்திலும் பரபரப்பு ஏற்பட்டது. இதுதொடர்பாக, சென்னை விமான நிலைய போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x