Published : 03 May 2025 01:45 PM
Last Updated : 03 May 2025 01:45 PM

மத்தியஸ்த மையத்தில் வழக்கு தொடர அதிக கட்டணம்: தலைமை நீதிபதிக்கு வழக்கறிஞர்கள் சங்கம் கடிதம்

சென்னை: சென்னை உயர் நீதிமன்றத்தில் செயல்படும் மத்தியஸ்தம் மையத்தில் வழக்கு தொடர்பவர்களுக்கான நீதிமன்ற கட்டணத்தை குறைக்க வேண்டும் என்று உயர் நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

இதுகுறித்து சென்னை உயர் நீதிமன்ற வழகறிஞர்கள் சங்க தலைவர் ஜி.மோகனகிருஷ்ணன், செயலாளர் ஆர்.கிருஷ்குமார், துணைத்தலைவர் எஸ்.அறிவழகன் மற்றும் நிர்வாகிகள், தலைமை நீதிபதி கே.ஆர்.ஸ்ரீராமிடம் கொடுத்த கோரிக்கை கடிதத்தில் கூறியிருப்பதாவது: பெரிய நிறுவனங்கள் மற்றும் தொழில் அமைப்புகள் தொடர்பான வழக்குகள் உயர் நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் சமரச பேச்சுவார்த்தை நடத்துவதற்காக உயர் நீதிமன்றத்தில் மத்தியஸ்த மையம் உள்ளது.

மாற்றுமுறை தீர்வாக செயல்படுத்தப்படும் இந்த மத்தியஸ்தம் தொடர்பாக உயர் நீதிமன்றத்தில் ஒரு குழு உள்ளது. இந்தக் குழுவில் நீதிபதிகள், மூத்த வழக்கறிஞர்கள் மற்றும் வழக்கறிஞர்கள் இடம்பெற்றுள்ளனர். இந்தக் குழு மத்தியஸ்தம் தொடர்பாக விவாதித்தல், சர்வதேச மத்தியஸ்த மையம் அமைத்தல், உயர் நீதிமன்ற மத்தியஸ்த மையத்தை வலுப்படுத்துதல் போன்ற செயல்களை மேற்கொள்ளும். ஆனால், இந்த குழுவின் கூட்டம் நடந்து பல ஆண்டுகள் ஆகிவிட்டன. அதுமட்டுமல்லாமல் மத்தியஸ்தம் செய்வதற்கான நீதிமன்ற கட்டணம் டெல்லி, கொல்கத்தா, மும்பை உயர் நீதிமன்றங்களைவிட பல மடங்கு அதிகமாக உள்ளது.

இதனால், பெரும்பாலான நிறுவனங்கள் சென்னை உயர் நீதிமன்றத்தை அணுகாமல் மற்ற உயர் நீதிமன்றங்களை நாடத் தொடங்கியுள்ளன. இதன் காரணமாக, தமிழக அரசுக்கு பெரும் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. எனவே, உயர் நீதிமன்ற கட்டண விதி குழு மத்தியஸ்தம் தொடர்பான நீதிமன்ற கட்டணத்தை மறு ஆய்வு செய்து கட்டணத்தை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். உயர் நீதிமன்ற வளாகத்தில் சர்வதேச மத்தியஸ்த மையத்தை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், என்று அதில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x