கோயிலில் ‘ரீல்ஸ்’ எடுத்தால் கடும் நடவடிக்கை

கோயிலில் ‘ரீல்ஸ்’ எடுத்தால் கடும் நடவடிக்கை
Updated on
1 min read

சென்னை: கோயில்களில் ‘ரீல்ஸ்’ வீடியோ பதிவு செய்து வெளியிட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார். சென்னை வில்லிவாக்கத்தில் முதல்வர் ஸ்டாலின் பிறந்தநாள் விழாவில் அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு நேற்று கலந்துகொண்டார்.

அப்போது, செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: திருநெல்வேலி நெல்லையப்பர் கோயிலில் சினிமா பாடலுக்கு நடனமாடி ‘ரீல்ஸ்’ வீடியோ எடுத்துள்ளனர். அவ்வாறு வீடியோ வெளியிட்டவர்கள் மீது புகார் கொடுத்து, சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். ஆன்மிக தலங்களில் இறையன்பர்கள் ஏற்கக்கூடிய நிகழ்ச்சியை தவிர்த்து, ரீல்ஸ் வீடியோ வெளியிடுவது உள்ளிட்ட எது நடந்தாலும், சம்பந்தப்பட்டவர்கள் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.

தாங்கள் அரசியல் செய்ய களம் இல்லாமல் போய்விடும் என்பதால்தான், எல்.முருகன் போன்றவர்கள் எதை பார்த்தாலும் குற்றம்சாட்டுகின்றனர். பிரதமர் மோடி தமிழகம் வரும் ஒவ்வொரு முறையும் திமுகவுக்கு 3 சதவீத வாக்குகள் உயரும். எனவே, சட்டப்பேரவை தேர்தலுக்கும் தமிழகத்தில் அவர் பிரச்சாரம் மேற்கொள்ள வரட்டும். இவ்வாறு அவர் கூறினார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in