

சென்னை: பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ள சென்னை தாம்பரம் மாநகராட்சி கவுன்சிலர்கள் மற்றும் உசிலம்பட்டி நகராட்சித் தலைவர் பதவிக்கு இப்போதைக்கு தேர்தல் நடத்த வேண்டாம் என மாநில தேர்தல் ஆணையத்துக்கு கடிதம் அனுப்பியுள்ளதாக தமிழக அரசு உயர் நீதிமன்றத்தில் தகவல் தெரிவித்துள்ளது.
அதிகார துஷ்பிரயோகத்தில் ஈடுபட்டதாகக் கூறி சென்னை மாநகராட்சி 189-வது வார்டு கவுன்சிலர் பாபு, 5-வது வார்டு கவுன்சிலர் கே.பி.சொக்கலிங்கம், தாம்பரம் மாநகராட்சி 40-வது வார்டு கவுன்சிலரும், மண்டலத் தலைவருமான ஜெயபிரதீப், உசிலம்பட்டி நகராட்சித் தலைவரும், 11-வது வார்டு கவுன்சிலருமான சகுந்தலா ஆகியோரை பதவிநீக்கம் செய்து நகராட்சி நிர்வாகத்துறை செயலர் கடந்த மார்ச் 27-ம் தேதி உத்தரவிட்டார்.
தங்களை பதவி நீக்கம் செய்தது செல்லாது என அறிவிக்கக்கோரி இந்த உத்தரவை எதிர்த்து 4 பேரும் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர்.
இந்த வழக்குகள் நீதிபதி ஜெ.சத்யநாராயண பிரசாத் முன்பாக நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது சென்னை, தாம்பரம் கவுன்சிலர்கள் சார்பில் மூத்த வழக்கறிஞர்கள் எஸ்.ஆர்.ராஜகோபால், டி.மோகன் ஆகியோரும், உசிலம்பட்டி நகராட்சித் தலைவர் சார்பில் வழக்கறிஞர் டி. செல்வமும் ஆஜராகி, 'இந்த 4 பேரையும் பதவி நீக்கம் செய்தது சட்டப்பூர்வமான விதிமுறைகளுக்கு எதிரானது. அவர்கள் தரப்பு விளக்கத்தைக் கோராமல் ஒருதலைபட்சமாக பதவியில் இருந்து நீக்கியுள்ளனர். இது சட்டவிரோதம். எனவே பதவி நீக்க உத்தரவுக்கு தடை விதித்து அதை ரத்து செய்ய வேண்டும்' என வாதிட்டனர்.
ஜூன் 9-க்கு தள்ளி வைப்பு: அப்போது அரசு கூடுதல் தலைமை வழக்கறிஞர் எம்.சுரேஷ்குமார் ஆஜராகி, இந்த வழக்குகள் முடிவுக்கு வரும் வரை நான்கு பதவிகளுக்கும் தேர்தல் நடத்தக் கூடாது என நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை செயலர், மாநில தேர்தல் ஆணையத்துக்கு கடிதம் அனுப்பியுள்ளதாகவும், எனவே அதுவரை தேர்தல் நடத்தப்படாது என்றும் தெரிவித்தார். அதைப் பதிவு செய்து கொண்ட நீதிபதி, இந்த வழக்கு விசாரணையை வரும் ஜூன் 9-க்கு தள்ளிவைத்துள்ளார்.