தொகுப்பூதிய செவிலியர்களுக்கு சமவேலைக்கு சம ஊதியம்: ஐகோர்ட் உத்தரவை அமல்படுத்த கெடு

தொகுப்பூதிய செவிலியர்களுக்கு சமவேலைக்கு சம ஊதியம்: ஐகோர்ட் உத்தரவை அமல்படுத்த கெடு
Updated on
1 min read

சென்னை: தொகுப்பூதிய செவிலியர்களுக்கு சமவேலைக்கு சம ஊதியம் வழங்க உயர் நீதிமன்றம் கடந்த 2018-ம் ஆண்டு பிறப்பித்த உத்தரவை 3 மாதங்களில் அமல்படுத்த அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.

தமிழக அரசு மருத்துவமனைகளில் கடந்த 2015-ம் ஆண்டு தொகுப்பூதிய அடிப்படையில் 7 ஆயிரத்து 243 செவிலியர்கள் நியமிக்கப்பட்டனர். 2 ஆண்டுகளுக்குப் பிறகு அவர்கள் பணி நிரந்தரம் செய்யப்படுவார்கள் என உறுதியளிக்கப்பட்டும், 4 ஆயிரம் செவிலியர்கள் மட்டுமே பணி நிரந்தரம் செய்யப்பட்டனர். எஞ்சிய தொகுப்பூதிய செவிலியர்கள் தங்களையும் பணிநிரந்தரம் செய்யக்கோரியும், நிரந்தர செவிலியர்களுக்கு இணையாக பணிபுரியும் தங்களுக்கும் சம வேலைக்கு சம ஊதியம் வழங்க வேண்டும் எனக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர்.

இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், இதுதொடர்பாக மக்கள் நல்வாழ்வுத் துறை செயலர் தலைமையில் குழு அமைத்து தொகுப்பூதிய செவிலியர்களின் பணியை நிரந்தர செவிலியர்களின் பணியுடன் ஒப்பீடு செயது 6 மாதத்தில் சம வேலைக்கு சம ஊதியம் வழங்குவது தொடர்பாக தமிழக அரசு முடிவு எடுக்க வேண்டும், என கடந்த 2018-ம் ஆண்டு உத்தரவிட்டது.

இந்த உத்தரவை அரசு நிறைவேற்றாததால், நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், தொகுப்பூதிய செவிலியர்கள் மற்றும் நிரந்தர செவிலியர்களின் பணி குறித்து ஆய்வு செய்து அறிக்கை அளிக்க ஒய்வு பெற்ற நீதிபதிகள் ஆர். பார்த்திபன், பி. பாரதிதாசன் ஆகியோர் அடங்கிய குழுவை அமைத்து உத்தரவிட்டிருந்தது.

இந்நிலையில் இந்த வழக்கு நீதிபதிகள் ஆர்.சுப்பிரமணியன், பி.டி. ஆஷா ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் பார்த்திபன், பாரதிதாசன் ஆகியோர் அடங்கிய குழு அறிக்கை தாக்கல் செய்தது. அதையடுத்து நீதிபதிகள், தொகுப்பூதியத்தில் நியமிக்கப்பட்ட செவிலியர்களுக்கு, நிரந்தர செவிலியர்களுக்கு இணையான ஊதியம் வழங்குவது தொடர்பாக கடந்த 2018-ம் ஆண்டு உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை தமிழக அரசு 3 மாதங்களில் அமல்படுத்த வேண்டும், எனக்கூறி நீதிமன்ற அவமதிப்பு வழக்கை முடித்து வைத்தனர். ஒருவேளை இந்த உத்தரவை தமிழக அரசு அமல்படுத்தாவிட்டால் இந்த அவமதிப்பு வழக்கு மீண்டும் விசாரணைக்கு எடுக்கப்படும் என்றும் நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in