

சென்னை: கொளத்தூர் சோமநாத சுவாமி கோயிலுக்கு வருமானம் ஈட்டும் வகையில் அந்த நிலத்தில் காவல் நிலையம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அறநிலையத் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டதால், ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணிகளுக்கு தடை விதிக்க முடியாது என உயர் நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.
சென்னை கொளத்தூர் அன்னை சத்யா நகரில் சோமநாத சுவாமி கோயிலுக்கு சொந்தமான 24 ஆயிரம் சதுர அடி நிலத்தை சிலர் ஆக்கிரமிப்பு செய்துள்ளனர். இந்த ஆக்கிரமிப்புகளை அகற்ற அறநிலையத் துறை எடுத்து வரும் நடவடிக்கைகளுக்கு தடை விதிக்கக் கோரியும், அங்கு வசிப்பவர்களை வாடகைதாரர்களாக கருதக் கோரியும் சிவராஜ் உள்ளிட்டோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர்.
இந்த வழக்கு நீதிபதி டி. பரத சக்ரவர்த்தி முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது அறநிலையத் துறை தரப்பில் ஆஜரான சிறப்பு அரசு வழக்கறிஞர் என்.ஆர்.ஆர்.அருண் நடராஜன், “அன்னை சத்யா நகரில் உள்ள சோமநாத சுவாமி கோயில் நிலத்தில் ஒருங்கிணைந்த காவல் நிலையம் அமைக்க மாதம் ரூ.1.80 லட்சத்துக்கு வாடகைக்கு விடப்படவுள்ளது. அடுத்த மாதம் இதற்கான பணிகள் தொடங்கப்படவுள்ளது. முறையான நடவடிக்கைகள் மூலமாகவே மனுதாரரான சிவராஜிடமிருந்து ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட கோயில் நிலம் மீட்கப்பட்டுள்ளது. எனவே ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணிக்கு தடை விதிக்கக் கூடாது.” என வாதிட்டார்.
அதையடுத்து நீதிபதி, கோயிலுக்கு வருமானம் ஈட்டும் வகையில் அந்த நிலத்தில் காவல் நிலையம் அமைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதால், ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணிக்கு தடை விதிக்க முடியாது என மறுப்பு தெரிவித்து, வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளார்.