“உதயநிதி அமைச்சரவையிலும் துரைமுருகன்...” - பேரவையில் எம்எல்ஏ பேச்சால் சிரிப்பலை

“உதயநிதி அமைச்சரவையிலும் துரைமுருகன்...” - பேரவையில் எம்எல்ஏ பேச்சால் சிரிப்பலை
Updated on
1 min read

சென்னை: உதயநிதி அமைச்சரவையிலும் துரைமுருகன் சிறப்பாக செயல்படுவார் என்று சட்டப்பேரவையில் சீர்காழி தொகுதி எம்எல்ஏ மு.பன்னீர்செல்வம் பேசியதால் அவையில் இன்று சிரிப்பலை ஏற்பட்டது.

தமிழக சட்டப்பேரவையில் சீர்காழி தொகுதி எம்எல்ஏ மு.பன்னீர்செல்வம், சீர்காழி தொகுதி, கொள்ளிடம் வடிகால் ஆற்றின் வலது கரையின் சாலையை சீரமைப்பது குறித்து கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தார். அப்போது பேசிய அவர், “மூத்த அமைச்சர் துரைமுருகன், மு.கருணாநிதி அமைச்சரவையிலும் சிறப்பாக செயல்பட்டார். இப்போது தலைவர் ஸ்டாலின் தலைமையிலும் சிறப்பாக செயல்பட்டு வருகிறார். ஏன், உதயநிதி அமைச்சரவையிலும் சிறப்பாக செயல்படுவார்” என பேசினார்.

இதை கேட்டதும், பேரவையே சிரிப்பொலியால் அதிர்ந்தது. முதல்வர் ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி உள்ளிட்ட அனைவரும் சிரித்தனர். அப்போது குறுக்கிட்ட பேரவைத் தலைவர் மு.அப்பாவு, “நீங்கள் பேசியது எல்லாம் சரிதான், ஆனால் அவரை மூத்தவர் என கூறியது மட்டும் தவறு. அவர் இன்றும் இளையவர்தான்” என கூற, மீண்டும் அவையில் சிரிப்பலை ஏற்பட்டது.

பின்னர் அமைச்சர் துரைமுருகன் பதில் அளித்து பேசும்போது, “பன்னீர்செல்வம் பழைய காலத்து ஆள். அவர் பேசியது எல்லாம் சரிதான். அந்த தொகுதியில் போராடி, சவால் விட்டு ஜெயித்தவர். மேலும் தஞ்சாவூர், மயிலாடுதுறை மாவட்டங்களில் கொள்ளிடம் ஆற்றுப் பகுதி முழுமைக்கும் புனரமைப்பு பணி மற்றும் கால்வாய்களில் தானியங்கி தண்ணீர் பாசன திட்டத்தை செயல்படுத்துவதற்காகவும், விரிவான இறுதி திட்ட அறிக்கை தயாரிக்கும் பணிக்கு ரூ.9.98 கோடியில் நிர்வாக ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. விரிவான இறுதி திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு வருகிறது” என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in