

சென்னை: மாற்றுத் திறனாளிகள் குறித்து பேசியதற்காக நிபந்தனையற்ற வருத்தம் தெரிவித்துக் கொள்கிறேன் என்று அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.
திமுக கூட்டம் ஒன்றில் சமீபத்தில் பேசிய திமுக பொதுச்செயலாரும், மூத்த அமைச்சருமான துரைமுருகன், எதிர்க்கட்சிகளை விமர்சித்தபோது, மாற்றுத் திறனாளிகளுக்கான முந்தைய பெயரை குறி்ப்பிட்டு, அவர்களுடன் சேர்ந்து திமுகவை எதிர்க்கின்றனர் என்று பேசினார். இந்த பேச்சு சர்ச்சையான நிலையில், மாற்றுத் திறனாளிகள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
மாற்றுத் திறனாளிகள் தரப்பில் போராட்டம் நடத்தியதுடன், காவல் துறையிலும் புகார் தெரிவித்திருந்தனர். இந்நிலையில், நேற்று காலை சர்ச்சை பேச்சு தொடர்பாக அமைச்சர் பொன்முடியின் கட்சிப் பதவியை பறித்து, உடனே புதியவரை நியமிக்கும் அறிவிப்பை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார். அந்த அறிவிப்பு வெளியான சிறிது நேரத்தில் அமைச்சர் துரைமுருகன் அறிக்கை ஒன்றை வெளியிட்டார்.
அந்த அறிக்கையில் அவர் கூறியிருப்பதாவது: இயற்கையிலேயே உடலில் ஏற்பட்ட குறைபாடு உடையவர்களை அருவருக்கும் பெயர் கொண்டு, அவர்களை அழைத்து வந்ததை மறைந்த முன்னாள் முதல்வர் மு.கருணாநிதி கருணை உள்ளத்தோடு "மாற்றுத் திறனாளிகள்"" என்று பெயரிட்டு அழைத்தார். அதையே நாங்களும் பின்பற்றி வருகிறோம்.
அப்படிப்பட்ட நானே, ஒரு பொதுக்கூட்டத்தில் பேச்சின் வேகத்தில் மாற்றுத் திறனாளிகளை பழைய பெயரையே கொண்டு உச்சரித்து விட்டேன் என்று கழகத் தலைவர் முதல்வர் மு.க.ஸ்டாலின் என் கவனத்துக்கு கொண்டு வந்தபோது, நான் அதிர்ச்சியும் - வருத்தமும் அடைந்தேன்.
கருணாநிதியால் வளர்க்கப்பட்ட நானே இப்படிப்பட்ட தவறை செய்தது மிகப்பெரிய தவறாகும். மாற்றுத் திறனாளிகள் உள்ளம் புண்பட்டிருக்கும். அதற்காக என் நிபந்தனையற்ற வருத்தத்தை தெரிவித்துக் கொள்கிறேன். தலைவர் மு.க.ஸ்டாலின், எந்தளவுக்கு வருந்தியிருப்பார் என்பது எனக்குத் தெரியும். அவருக்கும் என் வருத்தத்தை தெரிவித்து, இனி இத்தகைய நிகழ்வு நிகழாது என்று உறுதி அளிக்கிறேன். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.