Published : 12 Apr 2025 05:00 AM
Last Updated : 12 Apr 2025 05:00 AM
சென்னை: சட்டவிரோத பணப் பரிமாற்றம், மோசடிகளில் அமைச்சர் கே.என்.நேருவின் சகோதரர் ரவிச்சந்திரன் மற்றும் மகன் அருண் நேருவுக்கு தொடர்பு இருப்பதாக அமலாக்கத் துறை தெரிவித்துள்ளது.
அமைச்சர் கே.என்.நேருவின் சகோதரர்கள் மற்றும் மகன் தொடர்புடைய இடங்களில் அமலாக்கத் துறையினர், கடந்த 7-ம் தேதி முதல் 3 நாட்கள் சோதனை நடத்தினர்.
இதைத் தொடர்ந்து அமலாக்கத் துறை வெளியிட்ட செய்திக்குறிப்பு: சட்டவிரோத பணப்பரிமாற்ற தடுப்பு சட்டத்தின்கீழ் சென்னை, திருச்சி, கோவை உள்ளிட்ட நகரங்களில் உள்ள 15 இடங்களில், ‘ட்ரூடம் இ.பி.சி., இந்தியா தனியார் நிறுவனம் மற்றும் அந்நிறுவன சார்ந்த இடங்களில் சோதனை நடத்தப்பட்டது. இதில், இந்தியன் ஓவர்சீஸ் வங்கியிடம், ‘ட்ரூடம் நிறுவனம் ரூ.30 கோடி கடன் பெற்று அதை முறைடோக பயன்படுத்தி உள்ளது. இதுதொடர்பாக, சிபிஐ வழக்கு பதிவு செய்தது. அதன் அடிப்படையில் அமலாக்கத் துறை விசாரணை செய்தது.
இந்நிறுவனம், 100.8 மெகாவாட் காற்றாலை மின்நிலையம் அமைக்ககவே ரூ.30 கோடியை கடன் வாங்கியது. ஆனால், காற்றாலை மின் உற்பத்திக்கான எவ்வித அனுபவமும் அந்நிறுவனத்துக்கு இல்லை. கடன்பெற போலி ஆவணங்கள் உருவாக்கி, திசை திருப்பி பணம் பெறப்பட்டுள்ளது. இந்நிறுவனம் வாயிலாக பெறப்பட்ட கடன் தொகை, ‘ட்ரூ வேல்யூ ஹோம்ஸ்’, ‘டி.வி.எச். எனர்ஜி ரீசோர்சஸ்’ ஆகிய நிறுவனங்களின் கடன்களை அடைக்க பயன்படுத்தப்பட்டுள்ளது.
இது சட்டவிரோதமானது. மேலும், இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் வாங்கிய கடனை திருப்பி செலுத்தவும் முயற்சி மேற்கொள்ளவில்லை. சோதனையில், டிஜிட்டல் பதிவுகள், சொத்து ஆவணங்கள் உள்ளிட்ட பல்வேறு முக்கிய ஆவணங்கள் சிக்கியுள்ளன. எனவே, பணப்பரிமாற்றம் மற்றும் மோசடிகளில், ரவிச்சந்திரன் மற்றும் அருண் நேருவுக்கு தொடர்பு இருப்பது தெரிய வந்துள்ளது.
மேலும் விசாரணையின்போது, தமிழக நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையில் ஊழல் நடந்திருப்பது கண்டறியப்பட்டுள்ளது. குறிப்பாக, திட்டமிட்டு டெண்டர் ஒதுக்கீட்டில் முன்கூட்டியே கமிஷன் நிர்ணயிக்கப்பட்டு வசூலிக்கப்பட்டு உள்ளது. இதன் வாயிலாக, விடப்பட்ட டெண்டர்களில் முறைகேடு நடந்திருப்பது தெரியவந்துள்ளது.
இதில் இடைத்தரகர், அரசியல் பிரமுகர்கள், உயர் அதிகாரிகள் உள்ளிட்டவர்களின் கூட்டு பங்கு அதிகம். இதற்கான ஆதாரங்களும் கிடைத்துள்ளன. சட்டவிரோத பணத்தை, பல்வேறு மாநிலங்களிலும் ஹவாலா பணப்பரிமாற்றமாக பயன்படுத்தப்பட்டுள்ளது. இத்துறையில், அதிகாரிகள் பணியிட மாற்றம் பதவி உயர்வு உள்ளிட்டவற்றுக்கு லஞ்சம் பெறப்பட்டதும் தெரியவந்துள்ளது.
இதற்கான ஆவணங்களும் கைப்பற்றப்பட்டுள்ளன. இதற்காகவே, மாநிலம் முழுதும் நெட்வொர்க் அமைத்து ஊழல் நடந்துள்ளது. இதில், தொடர்புடையவர்களை கண்காணிக்கும் பணி முடுக்கிவிடப்பட்டுள்ளது. இவற்றால், அரசு கருவூலத்துக்கு ஏற்பட்ட இழப்பு குறித்து முழுமையான விசாரணை நடந்து வருகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இதற்கிடையில், நேற்று ரவிச்சந்திரனுக்கு திடீர் உடல்நிலை பாதிக்கப்பட்டதால், சென்னை ஆயிரம் விளக்கில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT