‘ஒன்றிய அரசின் பேரிடர் நிதி சோளப் பொறி கொடுத்து யானை பசி  தீர்க்கும் செயல்’ - முத்தரசன்

‘ஒன்றிய அரசின் பேரிடர் நிதி சோளப் பொறி கொடுத்து யானை பசி  தீர்க்கும் செயல்’ - முத்தரசன்
Updated on
1 min read

சென்னை: ஒன்றிய அரசின் பேரிடர் நிதி, சோளப் பொறி கொடுத்து யானை பசி தீர்க்கும் செயலாகும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் தெரிவித்தார்.

இதுகுறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது: தமிழ்நாட்டில் கடந்த மூன்று ஆண்டுகளாக இயற்கை பேரிடர் தாக்குதலால் பல்லாயிரம் கோடி பேரிழப்பு ஏற்பட்டுள்ளது. பெஞ்ஜல் புயல், பெருமழை, வெள்ளம் போன்ற பேரிடர் வரையான இழப்புகளுக்கு நிவாரணம் வழங்கவும், மறுசீரமைப்பு செய்யவும் 37 ஆயிரம் கோடி ரூபாய்க்கும் கூடுதலான பேரிடர் நிவாரண நிதி மற்றும் பேரிடர் துயர் தணிப்பு நிதி தேவை என தமிழ்நாடு அரசு, ஒன்றிய அரசிடம் முறையிட்டுள்ளது.

பேரிடர் காலங்களில் ஒன்றிய அமைச்சர்கள் பாதிக்கப்பட்ட பகுதிகளை நேரில் பார்வையிட்டு செல்கின்றனர். அப்போதெல்லாம் ஒன்றிய அரசு பெரும் உதவி செய்யும் என்று உறுதி அளித்துச் செல்கின்றனர். தொடர்ந்து ஒன்றிய அரசின் பல்துறை உயர் அலுவலர்கள் கொண்ட குழுக்களை அனுப்பி, கள ஆய்வும், அதிகாரிகள் மற்றும் அரசு மட்ட விசாரணைகளும் மேற்கொண்டு, ஒன்றிய அரசுக்கு அறிக்கைகளை பெற்று வருகின்றது.

ஆனால், குடிப்பதற்கு தண்ணீர் கேட்டால், குளிப்பாட்ட தண்ணீர் தருவது போல் மிக நீண்ட கால தாமதத்திற்கு பிறகு சொற்ப தொகையை ஒதுக்கீடு செய்து, ஒப்புதல் வழங்கும் நிர்வாக நடவடிக்கையை கூட, பெரிய அளவில் விளம்பரம் செய்து, அரசியல் ஆதாயம் தேடும் மலிவான செயலில் ஈடுபட்டு வருகிறது. இதன் தொடர்ச்சியாக தற்போது ஒன்றிய அரசின் உள்துறை அமைச்சகம், தமிழ்நாட்டுக்கான பேரிடர் நிவாரண நிதியாக ரூ 522.34 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது. இது தமிழ்நாடு அரசு கோரியுள்ள நிவாரண நிதியில் 1.5 சதவீதம் கூட இல்லை என்பதை அறிந்து கொள்ள முடிகிறது.

ஒன்றிய அரசின் இந்த நிதி ஒதுக்கீடு ''சோளப்பொறி போட்டு, யானைப்பசியை போக்கும்'' முயற்சியாகும். தமிழ்நாட்டையும், தமிழக மக்களையும் தொடர்ந்து வஞ்சித்து வரும் பாஜக ஒன்றிய அரசுக்கு கடுமையான பாடம் புகட்ட வேண்டும் என இந்தியக் கம்யூனிஸ்டு கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு கேட்டுக் கொள்கிறது. தமிழ்நாடு அரசு கோரியுள்ள பேரிடர் நிவாரண நிதியை முழு அளவில் வழங்கி உதவ வேண்டும் என ஒன்றிய அரசை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது.' இவ்வாறு முத்தரசன் தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in