

சொத்து வரியை ஏப்.30-ம் தேதிக்குள் செலுத்தி ரூ.5 ஆயிரம் வரை ஊக்கத்தொகை பெறலாம் என சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக மாநகராட்சி வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: சென்னை மாநகராட்சிக்கு சொத்து வரியானது, பிரதான வருவாயாகும். இதன் மூலமே, சென்னை மாநகருக்குத் தேவையான அடிப்படை கட்டமைப்புகள், குப்பை திடக்கழிவுகள் அகற்றுதல், தெரு விளக்குகள், பூங்காக்கள் மற்றும் சாலைகள் பராமரித்தல், பொது சுகாதாரம் நோய்த்தடுப்புப் பணி போன்ற அத்தியாவசியப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
தமிழ்நாடு நகர்ப்புர உள்ளாட்சி அமைப்புகள் சட்டம், 1998, பிரிவு 84 (1)ன்படி, ஒவ்வொரு அரையாண்டு தொடக்கத்தின் முதல் 30 தினங்களுக்குள் சொத்து வரியை செலுத்தும் சொத்து உரிமையாளர்களுக்கு, நிகர சொத்து வரியில் 5 சதவீதம் அல்லது அதிகப்பட்சம் ரூ.5 ஆயிரம் ஊக்கத்தொகை அளிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.
தற்போது 2025-26-ம் நிதி ஆண்டின் முதல் அரையாண்டு தொடங்கியுள்ளது. எனவே சொத்து உரிமையாளர்கள் தங்களது அரையாண்டு சொத்து வரியை ஏப்.30-ம் தேதிக்குள் செலுத்தி ஊக்கத் தொகை பெறலாம். இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.