

செட்டிக்குளம் பகுதியில் விளையும் சின்ன வெங்காயத்துக்கு மத்திய அரசு புவிசார் குறியீடு வழங்கியுள்ளதால் பெரம்பலூர் மாவட்ட விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
தமிழகத்தில் பெரம்பலூர் மாவட்டத்தில் அதிக அளவில் சின்ன வெங்காயம் சாகுபடி செய்யப்படுகிறது. இங்கு ஆண்டுக்கு 70 ஆயிரம் டன் சின்ன வெங்காயம் உற்பத்தியாகிறது. குறிப்பாக, செட்டிக்குளம் பகுதியில் உள்ள 10-க்கும் மேற்பட்ட கிராமங்களில் விளைவிக்கப்படும் சின்ன வெங்காயம், மற்ற பகுதிகளில் விளைவிக்கப்படும் சின்ன வெங்காயத்தைவிட அதிக காரத்தன்மை, முளைப்புத் திறன், மருத்துவ குணம், தனிப்பட்ட சுவை கொண்டுள்ளது. 15-18 அடுக்கு உலர்ந்த வெளிப்புற செதில்களைக் கொண்டுள்ள இந்த சின்ன வெங்காயத்தை ஓராண்டு வரை சேமித்து வைக்க முடியும்.
தனித்துவம் மிக்க இந்த சின்ன வெங்காயத்துக்கு புவிசார் குறியீடு வழங்கக் கோரி 2022-ம் ஆண்டு மாவட்ட தோட்டக்கலை மற்றும் வேளாண் விற்பனை மற்றும் வணிகத்துறை சார்பில் விவசாயிகளைக் கொண்ட குழு அமைத்து, புவிசார் குறியீடு கேட்டு மத்திய அரசிடம் விண்ணப்பிக்கப்பட்டது. பல்வேறு கட்ட ஆய்வுக்குப் பின்னர் செட்டிக்குளம் சின்ன வெங்காயத்துக்கு மத்திய அரசு நேற்று புவிசார் குறியீடு வழங்கியது. செட்டிக்குளம் சின்ன வெங்காயத்தை சர்வதேச அளவில் சந்தைப்படுத்த வாய்ப்பு ஏற்பட்டுள்ளதால், பெரம்பலூர் மாவட்ட விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.