

ராமேசுவரம்: இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டு மீனவர்களை விடுதலை செய்ய வலியுறுத்தி ராமேசுவரம் விசைப்படகு மீனவர்கள் ஒருநாள் அடையாள வேலைநிறுத்தப் போராட்டத்தில் புதன்கிழமை ஈடுபட்டனர்.
ராமேசுவரம் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து திங்கட்கிழமை கடலுக்குச் சென்ற கென்னடி என்பவருக்குச் சொந்தமான விசைப்படகை இலங்கை கடற்படையினர் நெடுந்தீவு அருகே சிறைப்பிடித்து, படகிலிருந்த சங்கர், அர்ஜுனன், தர்ம முனியாண்டி ஆகிய 3 மீனவர்கள் கைது செய்யப்பட்டனர். 3 மீனவர்கள் மீதும் எல்லை தாண்டி மீன்பிடித்தல், தடை செய்யப்பட்ட வலைகளை பயன்படுத்துதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டு ஏப்ரல் 1 வரையிலும் நீதிமன்ற காவலில் யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இலங்கை சிறையில் அடைக்கப்பட்டுள்ள மீனவர்களை தாயகம் திருப்பி அழைத்து வர நடவடிக்கை எடுத்து வர வலியுறுத்தி ராமேசுவரம் விசைப்படகு மீனவர்கள் ஒருநாள் அடையாள வேலைநிறுத்தப் போராட்டத்தில் புதன்கிழமை ஈடுபட்டனர். இந்த வேலைநிறுத்தப் போராட்டத்தினால் கடலுக்குச் செல்லாமல் ராமேசுவரம் மீன்பிடி இறங்குதளத்தில் 500க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் நங்கூரமிடப்பட்டிருந்தது.
முன்னதாக. ராமேசுவரத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற மீனவர்கள் ஆலோசனைக் கூட்டத்தில், எல்லை தாண்டிச் சென்று விசைப்படகு மீனவர்கள் மீன்பிடிக்கக் கூடாது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.