

சென்னை: சிதம்பரம் நடராஜர் கோயிலில் பக்தர்கள் கனகசபையில் நின்று தரிசனம் செய்வதை தடுத்த தீட்சிதர்களுக்கு எதிரான வழக்கை ரத்து செய்யக் கோரிய மனுவை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
சிதம்பரம் நடராஜர் கோயிலில் கடந்த 2023-ம் ஆண்டு ஜூன் மாதம் நடந்த ஆருத்ரா தரிசனத்தின்போது பக்தர்கள் கனகசபையில் நின்று தரிசனம் செய்ய அறநிலையத் துறை அனுமதி வழங்கியது. ஆனால், அந்த உத்தரவை மீறி பக்தர்களை கனகசபையில் நின்று தரிசனம் செய்ய விடாமல் தடுத்ததாக சில தீட்சிதர்கள் மீது சிதம்பரம் தில்லையம்மன் கோயில் செயல் அலுவலரான சரண்யா காவல்துறையில் புகார் அளித்தார்.
அந்தப் புகாரின்படி பொது ஊழியரை பணி செய்ய விடாமல் தடுத்தல், கொலை மிரட்டல் விடுத்தல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் பட்டு என்பவர் உள்ளிட்ட 6 தீட்சிதர்கள் மீது சிதம்பரம் நகர் போலீஸார் வழக்குப் பதிவு செய்திருந்தனர். இந்த வழக்கை ரத்து செய்யக் கோரி பட்டு உள்ளிட்ட 6 பேரும் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர்.
இந்த வழக்கு நீதிபதி ஜி.கே.இளந்திரையன் முன்பாக வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது காவல் துறை சார்பில் ஆஜரான அரசு குற்றவியல் வழக்கறிஞர் கோபி, “இந்த வழக்கு விசாரணை நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்து வருவதால் வழக்கை ரத்து செய்யக் கூடாது” என ஆட்சேபம் தெரிவித்தார். இதையடுத்து நீதிபதி, வழக்கை ரத்து செய்ய மறுப்பு தெரிவித்து தீட்சிதர்கள் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.