

சென்னை: தருமபுரியில் தந்தத்துக்காக யானை எரிக்கப்பட்ட சம்பவம் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய வனத்துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை உயர் நீதிமன்றத்தில், வனப்பாதுகாப்பு தொடர்பான வழக்குகளை விசாரித்து வரும் நீதிபதிகள் என்.சதீஷ்குமார், டி. பரத சக்ரவர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வில் மூத்த வழக்கறிஞர் டி.மோகன் ஒரு முறையீடு செய்தார். “தமிழக - கர்நாடக எல்லையில் தருமபுரி மாவட்டம் பென்னாகரத்தை அடுத்த நெருப்பூர் ஏமனூர் அருகே சிங்காபுரம் வனப்பகுதியில் கடந்த மார்ச் 1-ம் தேதியன்று யானை ஒன்று கொடூரமாக கொல்லப்பட்டு தும்பிக்கை தனியாகவும், உடல் தனியாகவும் எரிக்கப்பட்ட நிலையில் கிடந்தது.
தந்தங்களுக்காக அந்த யானை வேட்டையாடப்பட்டு ஆதாரங்களை அழிப்பதற்காக இறந்த யானையின் உடலில் தீ வைத்து எரிக்கப்பட்டுள்ளதாகவும், இந்த சம்பவம் தொடர்பாக மூன்று சிறப்பு தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணை நடந்து வருவதாகவும் வனத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இந்தச் சம்பவம் தொடர்பாக உரிய உத்தரவுகளைப் பிறப்பிக்க வேண்டும்,” என்று முறையிட்டார். இந்த முறையீட்டைக் கேட்ட நீதிபதிகள், இந்த கொடூர சம்பவம் தொடர்பாக தமிழக வனத்துறை அதிகாரிகள் வரும் மார்ச் 13-ம் தேதி அன்று விரிவான அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்தனர்.