Published : 07 Mar 2025 04:06 PM
Last Updated : 07 Mar 2025 04:06 PM
சென்னை: தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட, கனிமங்களைக் கொண்டுள்ள நிலங்களுக்கு நிலவரி விதிப்பது மற்றும் உள்ளாட்சிகளுக்கு தனி அதிகாரிகளை நியமிப்பது உள்ளிட்ட இரண்டு சட்ட மசோதாக்களுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் வழங்கியுள்ளார்.
தமிழகத்தில் கனிமங்களை கொண்டுள்ள நிலங்களுக்கு நிலவரி விதிப்பது தொடர்பான சட்ட மசோதா தமிழக சட்டப்பேரவையில் கடந்த டிசம்பர் மாதம் நிறைவேற்றப்பட்டது. இந்த சட்டம், பழுப்புக்கரி, சுண்ணாம்புக் கல், சுண்ணாம்புக் களி, மாக்னசைட், காரீயம் உள்ளிட்ட 13 வகை கனிமங்களை பெரிய வகை கனிமங்களாகவும், கரட்டுக்கல், சரளை அல்லது மண், வண்ண மற்றும் கருப்பு கருங்கல், கூழாங்கற்கள், மணல், படிகக் கல், தீக்களிமண், உருட்டு களி மண், களிமண், ஆற்று மணல், நொறுங்கிய கல், சுண்ணப்பாறை உள்ளிட்ட 17 கனிமங்கள் சிறிய வகை கனிமங்களுக்கு நிலவரி விதிக்க வழி வகை செய்கிறது.
இதன்படி, பெரிய கனிமங்களுக்கு ஒரு டன்னுக்கு ரூ.40 முதல் ரூ.7 ஆயிரம் வரை வரியும், சிறு கனிமங்களுக்கு ஒரு டன்னுக்கு ரூ.40 முதல் ரூ.420 வரையும் வரி நிர்ணயம் செய்யப்பட்டது. இந்நிலையில், இந்த சட்ட மசோதாக்களுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் வழங்கியுள்ளார்.
இதைத்தவிர்த்து, தமிழகத்தில் பதவிக்கலாம் முடிந்த 28 மாவட்டங்களில் உள்ள உள்ளாட்சிகளுக்கு தனி அதிகாரிகள் நியமிப்பது தொடர்பான சட்ட மசோதாவுக்கும் ஆளுநர் ஒப்புதல் அளித்துள்ளார். ஆளுநர் ஒப்புதல் வழங்கிய நிலையில் இந்த இரண்டு சட்ட மசோதாக்களுக்கும் அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT