

வேங்கைவயல் வழக்கு விவகாரத்தில் குற்றம்சாட்டப்பட்டுள்ள 3 பேரும் வரும் 11-ம் தேதி நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு நேற்று சம்மன் விநியோகிக்கப்பட்டது.
புதுக்கோட்டை வேங்கைவயல் குடிநீர்த் தொட்டியில் மனிதக் கழிவு கழக்கப்பட்ட சம்பவத்தில், அதே பகுதியைச் சேர்ந்த காவலர் முரளிராஜா, முத்துகிருஷ்ணன், சுதர்சன் ஆகியோர் ஈடுபட்டதாக, மாவட்ட வன்கொடுமை தடுப்பு நீதிமன்றத்தில், சிபிசிஐடி போலீஸார் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர்.
பாதிக்கப்பட்ட சிறுமியின் தந்தை கனகராஜும், குற்றம்சாட்டப்பட்ட மூவரும் பட்டியலினத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால், இந்த வழக்கு வன்கொடுமை தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் இருந்து, குற்றவியல் நடுவர் நீதிமன்றத்துக்கு அண்மையில் மாற்றப்பட்டது. இந்த வழக்கை ஏற்றுக்கொண்ட நீதிபதி, மார்ச் 11-ம் தேதி வழக்கு விசாரணை நடைபெறும் என்று தெரிவித்தார்.
இதையடுத்து, முரளிராஜா, முத்துகிருஷ்ணன், சுதர்சன் ஆகிய 3 பேரும் மார்ச் 11-ம் தேதி நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு மூவரின் குடும்பத்தினரிடம் சிபிசிஐடி போலீஸார் நேற்று சம்மன் விநியோகித்தனர்.