“தொகுதி மறுசீரமைப்பால் தமிழகத்தில் 8 மக்களவைத் தொகுதிகளை இழக்கும் அபாயம்!” - முதல்வர் ஸ்டாலின் சொல்வது என்ன?

முதல்வர் ஸ்டாலின் | கோப்புப் படம்
முதல்வர் ஸ்டாலின் | கோப்புப் படம்
Updated on
2 min read

சென்னை: “தொகுதி மறுசீரமைப்பின் விளைவாக, தமிழகத்தில் இருக்கக் கூடிய 8 மக்களவைத் தொகுதிகளை இழக்க வேண்டிய அபாயம் ஏற்படும். இந்தப் பிரச்சினைக்கு எதிராக அதிமுகவும் நிச்சயமாக குரல் கொடுப்பார்கள் என்ற நம்பிக்கை எங்களுக்கு இருக்கிறது” என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமைச் செயலகத்தில் இன்று (பிப்.25) செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியது: “இன்றைக்கு நடந்த அமைச்சரவைக் கூட்டத்தில், நிதிநிலை அறிக்கை குறித்து பல்வேறு விளக்கங்களை இந்தத் துறையின் அதிகாரிகள் தெளிவாக எடுத்துச் சொல்லியிருக்கிறார்கள். அதுமட்டுமல்லாமல், ஒரு முக்கியமான முடிவை எடுத்திருக்கிறோம். தமிழகம் இன்றைக்கு மிகப் பெரிய உரிமைப் போராட்டத்தை நடத்த வேண்டிய சூழ்நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறது. ஆகவே, வருகிற மார்ச் 5-ம் தேதி, தொகுதி மறுசீரமைப்பு தொடர்பாக அனைத்துக் கட்சிக் கூட்டத்தை நடத்த இருக்கிறோம்.

அதாவது, தேர்தல் ஆணையத்தில் பதிவு பெற்றிருக்கக் கூடிய 40 கட்சிகளை அழைக்க முடிவு செய்து, இன்றைக்கு நாங்கள் அவர்களுக்கெல்லாம் கடிதம் அனுப்பயிருக்கிறோம். தொகுதி மறுசீரமைப்பு என்கின்ற பெயரில் தென்னிந்தியாவின் தலைக்கு மேல் ஒரு கத்தி தொங்கிக் கொண்டிருக்கிறது. அனைத்து வளர்ச்சிக் குறியீடுகளிலும் முதன்மை மாநிலமாக இருக்கக் கூடிய தமிழகம் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கிறது. இப்போது, தமிழகத்தில் மொத்தம் 39 மக்களவைத் தொகுதிகள் இருக்கிறது. இதை குறைக்கப்படுகின்ற அபாயம் ஏற்பட்டிருக்கிறது.

மத்திய அரசு 2026-ம் ஆண்டில், மக்களவைத் தொகுதிகளின் எண்ணிக்கையை மறுசீரமைப்பு செய்யப் போகிறார்கள். பொதுவாக இவையெல்லாம், மக்கள் தொகையை கணக்கிட்டுதான் செய்யப்படுகிறது. மக்கள் தொகையை கட்டுப்படுத்த வேண்டும் என்பது இந்திய நாட்டின் மிக முக்கியமான இலக்கு. அந்த இலக்கைப் பொறுத்தவரைக்கும் நம்முடைய தமிழகம் வெற்றி பெற்றிருக்கிறது. அது அனைவருக்கும் தெரியும். பல பத்தாண்டுகளாக வெற்றிகரமான குடும்பக் கட்டுப்பாடு திட்டங்கள், பெண்கள் கல்வி மற்றும் சுகாதார முன்முயற்சிகள் மூலம் நாம் இதை சாதித்திருக்கிறோம். மக்கள் தொகை குறைவாக இருக்கின்ற காரணத்தினால், நாடாளுமன்றத் தொகுதிகளின் எண்ணிக்கையும் குறைக்க வேண்டிய ஒரு சூழ்நிலை ஏற்பட்டிருக்கிறது.

இப்போது நாடு முழுவதும் இருக்கின்ற மக்கள் தொகை அடிப்படையில் தொகுதிகளை பிரித்தால், தமிழகத்தில் இருக்கக் கூடிய 8 மக்களவைத் தொகுதிகளை இழக்க வேண்டிய ஒரு சூழ்நிலை ஏற்படும். அதாவது, இனி தமிழகத்துக்கு 39 எம்.பி.க்கள் இருக்க மாட்டார்கள். 31 எம்.பி.க்கள்தான் இருப்பார்கள். இன்னொரு முறையில் கணக்கிட்டுப் பார்த்தீர்கள் என்றால், நாட்டில் ஒட்டுமொத்த எம்.பி.க்கள் எண்ணிக்கையை உயர்த்தி, அதற்கேற்ப பிரித்தாலும், நமக்கு இழப்புதான் ஏற்படும். நமக்கான பிரதிநிதித்துவம் குறைந்துவிடும். அதிக மக்கள்தொகை கொண்ட மாநிலங்களுக்கு அதிக பிரதிநிதித்துவம் கிடைக்கும். இதனால் தமிழகத்தினுடைய குரல் நசுக்கப்படுகிறது. இது வெறும் உறுப்பினர்களின் எண்ணிக்கையை பற்றிய கவலை மட்டுமல்ல. நம் மாநிலத்தின் உரிமையைச் சார்ந்தது என்பதை நாம் மறந்துவிடக் கூடாது.

தமிழகம் எதிர்கொள்ளவிருக்கும் இந்த முக்கியமான பிரச்சினையில், தமிழகத்தைப் பொறுத்தவரைக்கும், அனைத்து அரசியல் கட்சிகள் மற்றும் தலைவர்கள் எல்லாம் ஒன்றிணைந்து முதல் கட்டமாக இந்தக் கூட்டத்தை ஏற்பாடு செய்திருக்கிறோம். அனைத்துக் கட்சிகளும், கட்சிகளை எல்லாம் மறந்து, அரசியல் எல்லாம் கடந்து இந்த விவாதத்தில் ஒன்று சேர்ந்து குரல் கொடுக்க வேண்டும் என்று உங்கள் மூலமாக நான் கேட்டுக் கொள்கிறேன்” என்று முதல்வர் ஸ்டாலின் கூறினார்.

அப்போது, இந்த அனைத்து கட்சிக் கூட்டத்தில் மத்திய அரசு கொண்டு வந்திருக்கின்ற மும்மொழிக் கொள்கை பிரச்சினை சம்பந்தமாக பேசப்படுமா என்ற கேள்விக்கு பதில் அளித்த முதல்வர் ஸ்டாலின், “மும்மொழிக் கொள்கை மட்டுமல்ல, நீட் பிரச்சினை, மாநில அரசுக்கு தரவேண்டிய நிதிப் பிரச்சினை, அனைத்துப் பிரச்சினைகளுக்கும் சேர்த்து தீர்வு காணவேண்டும் என்றால், நம்முடைய எம்.பி-க்கள் எல்லாம் அதிகமாக இருந்தால்தான் குரல் கொடுக்கமுடியும். அதுதான் முக்கியத்துவம். அந்த அடிப்படையில்தான் கூட்டம் கூட்டப்படுகிறது” என்றார்.

மத்திய அரசுக்கு தொடர்ந்து பல்வேறு பிரச்சினைகள் தொடர்பாக தொடர்ந்து கடிதம் எழுதியிருக்கிறீர்கள். அரசியல் கட்சித்தலைவர்கள் பல்வேறு பிரச்சினைகளுக்காக போராட்டத்தை நடத்துகிறார்கள் என்ற கேள்விக்கு, “அதற்கு ஒன்றும் பதில் கிடைக்கவில்லை. அமைதியாகத்தான் இருக்கிறார்கள்” என்றார்.

அனைத்துக் கட்சிக் கூட்டம் கூட்டியிருக்கிறீர்கள். ஒவ்வொரு முறையும் நீங்கள் முயற்சி எடுத்துக் கொண்டுதான் இருக்கிறீர்கள். ஆனாலும் கூட தொய்வு அடைந்தது போல இருக்கிறது. ஏன் ஒற்றுமையில்லாமல் இருக்கிறார்கள். எதிர்க்கட்சியாக இருக்கக் கூடிய அதிமுகவை வலியுறுத்துவீர்களா என்று கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு, “அதிமுகவும் இதில் நிச்சயமாக குரல் கொடுப்பார்கள் என்ற நம்பிக்கை எங்களுக்கு இருக்கிறது” என்றார்.

தேசியக் கல்விக் கொள்கை ஏற்றுக்கொள்ள வேண்டும், மும்மொழிக் கொள்கையை ஏற்றுக் கொள்ளவேண்டும் என்று மத்திய அரசு தொடர்ச்சியாக சொல்லிக் கொண்டு இருக்கிறார்கள். மொழிப் போருக்கு மத்திய அரசு வித்திடுகிறது என்று நீங்கள் நினைக்கிறீர்களா என்ற கேள்விக்கு, “நிச்சயமாக வித்திடுகிறது. அதற்கு நாங்கள் தயாராக இருக்கிறோம்” என்று முதல்வர் ஸ்டாலின் பதிலளித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in