கோடம்பாக்கம் பவர்ஹவுசில் மெட்ரோ ரயில் நிலைய பணி தொடக்கம்

கோடம்பாக்கம் பவர்ஹவுசில் மெட்ரோ ரயில் நிலைய பணி தொடக்கம்
Updated on
1 min read

சென்னை: இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்தில், பூந்தமல்லி பைபாஸ் - கலங்கரை விளக்கம் வரையிலான 4-வது வழித்தடத்தில் கோடம்பாக்கம் பவர்ஹவுஸ் பகுதியில் மெட்ரோ மேம்பாலத்தில் ரயில் நிலையம் அமைக்கும் பணி தொடங்கப்பட்டுள்ளன.

சென்னையில் இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்தில், பூந்தமல்லி பைபாஸ் - கலங்கரை விளக்கம் வரை ஒரு வழித்தடமாக (4 -வது வழித்தடம்) மெட்ரோ ரயில் பணிகள் நடைபெறுகின்றன. கலங்கரை விளக்கம் முதல் கோடம்பாக்கம் மேம்பாலம் வரை சுரங்கப்பாதையாகவும், பவர்ஹவுஸ் முதல் பூந்தமல்லி பைபாஸ் வரை மேம்பால பாதையாகவும் அமைக்கப்படுகிறது. பல இடங்களில் மெட்ரோ ரயில் பாதை அமைக்கும் பணி, மெட்ரோ ரயில் நிலையப் பணி ஆகியபணிகள் தொடங்கி நடைபெறுகின்றன.

இந்நிலையில், கோடம்பாக்கம் பவர்ஹவுஸ் பகுதியில் மெட்ரோ மேம்பாலத்தில் ரயில் நிலையம் அமைக்கும் பணி தொடங்கி நடைபெற்று வருகிறது. இது குறித்து, சென்னை மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் கூறியதாவது:

கலங்கரை விளக்கம் - பூந்தமல்லி வழித்தடத்தில் 26.1 கி.மீ. மெட்ரோ ரயில் பணிகள் முழுவீச்சில் நடைபெறுகின்றன. இதில் 30 மெட்ரோ ரயில் நிலையங்கள் அமைய உள்ளன. இதில், கோடம்பாக்கம் பவர்ஹவுஸ் பகுதியில், 22 மீட்டர் அகலத்திலும், 140 மீட்டர் நீளத்திலும் மேம்பால மெட்ரோ ரயில் நிலையம் அமைக்கும் பணி தொடங்கி உள்ளது

4 மின்தூக்கி, 9 நகரும்படிக்கட்டு போன்ற பயணிகளுக்கான அனைத்து வசதிகளும் ஏற்படுத்தப்படும். பூந்தமல்லி - கலங்கரை விளக்கம் வழித்தடத்தில் ஒரு பகுதியாக பூந்தமல்லி வரையிலான மேம்பாலப்பாதையில் 55 சதவீதம் கட்டுமானப்பணிகள் முடிந்து உள்ளன. இந்த ஆண்டு இறுதிக்குள் பணிகள் நிறைவடையும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in