''தமிழக சிறைத்துறை பிற மாநிலங்களுக்கு முன்மாதிரி'' - துணை முதல்வர் உதயநிதி பெருமிதம்

தமிழ்நாடு சிறை மீண்டோர் நலச் சங்கத்தின் சார்பாக நடைபெற்ற நிகழ்ச்சியில் துணை முதல்வர் உதயநிதி பயனாளிகளுக்கு உதவித்தொகைகளை வழங்கினார்
தமிழ்நாடு சிறை மீண்டோர் நலச் சங்கத்தின் சார்பாக நடைபெற்ற நிகழ்ச்சியில் துணை முதல்வர் உதயநிதி பயனாளிகளுக்கு உதவித்தொகைகளை வழங்கினார்
Updated on
2 min read

சென்னை: “இந்தியாவில் இருக்கும் பிற மாநிலங்களைவிட, தமிழக அரசின் சிறைத்துறை ஒரு முன்மாதிரி துறையாக திகழ்கிறது. சிறைவாசிகளின் சீர்திருத்தத்திலும், மறுவாழ்வுக்கான முன்னெடுப்புகளிலும், சிறைவாசிகளின் நலனிலும் கூடுதல் அக்கறையுள்ள அரசாக இந்த அரசு செயல்பட்டு வருகிறது” என்று துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார்.

சென்னை, கலைவாணர் அரங்கில் தமிழ்நாடு சிறை மீண்டோர் நலச் சங்கத்தின் சார்பாக நடைபெற்ற நிகழ்ச்சியில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் இன்று (பிப்.18) கலந்துகொண்டார். இந்த நிகழ்ச்சியில் பேசிய உதயநிதி ஸ்டாலின், "திமுக ஆட்சிக்கு வந்த பிறகு தான், சிறைவாசிகளுக்கு சுகாதாரமான கழிப்பிட வசதிகளையும், நல்ல உணவுகளையும் வழங்க முதன்முதலாக ஏற்பாடு செய்யப்பட்டது. இன்றைக்கு திராவிட மாடல் அரசு, சிறைச்சாலைகளுக்குள் நூலகங்களை ஏற்படுத்துவதில் மும்முரமாக செயல்பட்டு வருகிறது.

நம்முடைய திராவிட மாடல் அரசு பொறுப்பேற்ற பிறகு, தமிழ்நாடு சிறைத்துறை வரலாற்றில் முதன் முறையாக ரூ. 2 கோடி செலவில் சிறை நூலகங்கள் மேம்படுத்தப்பட்டுள்ளன. சிறைத்துறை நூலகங்களுக்காக தமிழக முதல்வர், அவருக்கு பரிசாக வந்த 1500 புத்தகங்களை சிறைத் துறைக்கு வழங்கியிருக்கின்றார்.

ஒவ்வொரு மாவட்டத்திலும், அரசு நடத்துகின்ற அந்த புத்தகக் காட்சிகளில், சிறைவாசிகளுக்கு புத்தகங்கள் வழங்குவதற்காக தனி ஸ்டால்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. அதில் பொதுமக்கள் பலரும், பொது அமைப்புகளும் புத்தகங்களை அன்பளிப்பாக வழங்குவதை நாம் தொடர்ந்து பார்க்கின்றோம். எனக்கு அன்பளிப்பாக வருகின்ற புத்தகங்களைக் கூட சென்னைப் புத்தகக் காட்சி போன்ற நிகழ்வுகளின் மூலம், சிறை நூலகங்களுக்கு அனுப்பி வைக்கின்றோம். கடந்த 2023-ம் ஆண்டு நானே புழல் சிறைக்கு நேரில் சென்று அந்தப் புத்தகங்களை பரிசாக அந்த சிறைவாசிகளுக்கு வழங்கினேன்.

அந்த காலத்தோடு ஒப்பிடும்போது, இப்போது, சிறையில் பல வசதிகள் மேம்படுத்தப்பட்டுள்ளன. சிறைவாசிகளுக்கு இப்போது அசைவ உணவுகளும், சத்தான உணவுகளும் வழங்கப்பட்டு வருகின்றன. இன்றைக்கு இந்தியாவில் இருக்கும் பிற மாநிலங்களைவிட, தமிழக அரசின் சிறைத்துறை ஒரு முன்மாதிரி துறையாக திகழ்கிறது. சிறைவாசிகளின் சீர்திருத்தத்திலும், மறுவாழ்வுக்கான முன்னெடுப்புகளிலும், சிறைவாசிகளின் நலனிலும் கூடுதல் அக்கறையுள்ள அரசாக இந்த அரசு செயல்பட்டு வருகிறது.

ஏனென்றால், சாதாரணமாக இருப்பவர்களுக்கு உதவி செய்து, அவர்களை உயர்த்துவது என்பது வேறு. ஆனால், உடைந்துபோன மனிதர்களை, அப்படிப்பட்டவர்களுக்கு பக்கத்துணையாக இருந்து அவர்களுடைய நல்வாழ்வை உறுதி செய்வது என்பது வேறு. இது ஒரு மிகவும் சவாலான பணி. சிறையை நாங்கள் எப்போதுமே தண்டனைக்குரிய இடமாகப் பார்ப்பதில்லை. இதனை சீர்திருத்தத்திற்கான ஒரு இடமாகத் தான் இந்த அரசு பார்க்கின்றது. ஒருநொடி பொழுதில் ஏற்பட்ட கோபம் காரணமாக குற்றம் செய்து சிலர் தண்டனைப் பெற்றிருக்கலாம்.

அல்லது சூழ்நிலைகள் காரணமாக சிலர் குற்றச்செயல்களில் ஈடுபட்டு தண்டனை பெற்றிருக்கலாம். எது எப்படியிருந்தாலும் நடந்தவை நடந்தவையாக இருக்கட்டும். இனி நடப்பவை நல்லவைகளாக இருக்க வேண்டும் என்கிற எண்ணம் நமக்குள் ஏற்பட வேண்டும். அதனால், சிறையில் இருப்பவர்களுக்கு செய்யப்பட்ட வசதிகளைவிட, சிறையில் இருந்து வெளியே செல்பவர்களின் நலனிலும் அக்கறை உள்ளவர்களாக நாம் இருக்க வேண்டும் என்கிற அடிப்படையில் தான் இந்த நிகழ்ச்சி இங்கே ஏற்பாடு செய்யப்பட்டு, நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

சிறைவாசம் முடித்து விடுதலையாகி வெளியே செல்பவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்திக் கொள்ள உதவிடும் வகையில் ஒரு அமைப்பை ஏற்படுத்தி அதன் மூலம் பொருளாதார ரீதியான உதவிகள் செய்வது தான் உண்மையிலேயே முழுமையான சமூக சீர்திருத்த நடவடிக்கையாகும். இதற்காக தொடங்கப்பட்டது தான், இந்த தமிழ்நாடு சிறை மீண்டோர் நலச் சங்கம். இந்தியாவில் எந்த மாநிலத்திலும் இல்லாத வகையில், தமிழ்நாடு சிறை மீண்டோர் நலச் சங்கம் நம்முடைய மாநிலத்தில் மட்டும் தான் இருக்கின்றது என்பது கூடுதல் சிறப்பு.

இந்த நலச் சங்கம் 1921-ம் ஆண்டு முதல் செயல்பட்டு வந்தாலும், இதுவரை இந்த சங்கத்தின் வரலாற்றிலேயே இரண்டே முதல்வர்கள் தான், இச்சங்கத்தின் நிகழ்ச்சிகளில், மேடையில் கலந்து கொண்டிருக்கிறார்கள். தமிழகத்தின் முன்னாள் முதல்வர் கருணாநிதி 1972-ம் ஆண்டு நடைபெற்ற இச்சங்கத்தின் பொன்விழா ஆண்டு நிகழ்வில் கலந்து கொண்டு உரை ஆற்றியுள்ளார்.

அதேபோல், தமிழக முதல்வர் ஸ்டாலின், கடந்த 2023-ம் ஆண்டு சிறையில் இருந்து விடுதலை பெற்ற முன்னாள் சிறைவாசிகள் 660 பேருக்கு 3 கோடியே 30 லட்சம் ரூபாய் உதவித் தொகையை இதே மேடையில் வழங்கினார். இன்றைக்கு விடுதலை பெற்ற, 750 சிறைவாசிகளுக்கு 3 கோடியே 75 லட்சம் ரூபாய் மதிப்பில் உதவித் தொகை வழங்கப்படும் நிகழ்ச்சியில் நான் கலந்து கொள்கின்றேன்.

இந்த உதவியினைப் பெற்றுக் கொண்டு, நீங்கள் அனைவரும் கடந்த காலத்தை மறந்து, எதிர்காலத்தை மட்டும் சிந்தித்து, உங்களுடைய குடும்பம், உற்றார், உறவினர், நண்பர்களுடைய நலனை மட்டும் சிந்தித்து, நல்லவண்ணம் உங்கள் வாழ்க்கையில் முன்னுக்கு நீங்கள் வர வேண்டும். உங்களுக்கு தரப்படுகின்ற அந்த நிதியை ஒரு நல்ல வழியில் நீங்கள் பயன்படுத்த வேண்டும். அதற்கு நம்முடைய திராவிட மாடல் அரசு என்றென்றைக்கும் உங்களுக்கு எல்லா வகையிலும் துணை நிற்கும்,” என்று தெரிவித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in