Published : 14 Feb 2025 06:38 PM
Last Updated : 14 Feb 2025 06:38 PM
மதுரை: உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் முதல் முறையாக நிரந்தர நீதிபதிகள் பதவியேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
சென்னை உயர் நீதிமன்றத்தின் கிளை அமர்வு மதுரையில் அமைக்கப்பட்டு 20 ஆண்டு முடிந்துள்ளது. மதுரை அமர்வுக்கான நீதிபதிகள் சென்னை உயர் நீதிமன்றத்தில் இருந்து 3 மாதத்துக்கு ஒரு முறை சுழற்சி முறையில் நியமிக்கப்பட்டு வருகின்றனர். சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி அவ்வப்போது மதுரை அமர்வுக்கு வந்து வழக்குகளை விசாரித்து வருகிறார்.
இருப்பினும் புதிய நீதிபதிகள் பதவியேற்பு மற்றும் பணியிலிருந்து ஓய்வு பெறும் நீதிபதிகளுக்கான பிரிவு உபச்சார விழாக்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் வைத்து தான் நடைபெறும். மதுரை அமர்வில் பணிபுரியும் நீதிபதி ஓய்வு பெற்றாலும் அவருக்கான பிரிவு உபச்சார விழா சென்னையில் தான் நடைபெறும். இவ்விழாக்களில் மதுரை அமர்வு நீதிபதிகள் காணொலி வழியாக பங்கேற்று வந்தனர்.
சில ஆண்டுகளுக்கு முன்பு மதுரை அமர்வில் பணிபுரியும் நீதிபதிகள் பணி ஓய்வு பெற்றால் அவர்களுக்கான பிரிவு உபச்சார விழா மதுரை அமர்வில் நடத்த அனுமதி வழங்கப்பட்டது. அதன்படி நடத்தப்பட்ட விழாக்களில் தலைமை நீதிபதி மற்றும் சென்னை உயர் நீதிமன்றத்தில் பணிபுரியும் நீதிபதிகள் காணொலி வழியாக பங்கேற்கின்றனர்.
இந்நிலையில், மதுரை அமர்வில் முதல் முறையாக நீதிபதிகளுக்கான பதவியேற்பு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் பணிபுரிந்து வரும் தற்காலிக நீதிபதிகள் வி.லட்சுமி நாராயணன் மற்றும் நீதிபதி பி.வடமலை ஆகியோர் நிரந்தர நீதிபதிகளாக நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் இருவரும் தற்போது மதுரை அமர்வில் பணிபுரிந்து வருகின்றனர். தலைமை நீதிபதி கே.ஆர்.ஸ்ரீராமும் மதுரை அமர்வில் வழக்குகளை விசாரித்து வருகிறார்.
இதையடுத்து இரு நீதிபதிகள் பதவியேற்பு நிகழ்ச்சி மதுரை அமர்வில் இன்று நடைபெற்றது. இரு நீதிபதிகளுக்கும் தலைமை நீதிபதி கே.ஆர்.ஸ்ரீராம் பதவிப் பிரமாணம் செய்து வைத்து, இருவரையும் நிரந்தர நீதிபதியாக நியமித்து குடியரசுத் தலைவர் பிறப்பித்த ஆணையை வழங்கினார். இந்த நிகழ்வில் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் காணொலி வழியாக பங்கேற்றனர். மதுரை அமர்வு நீதிபதிகள், அரசு வழக்கறிஞர்கள், வழக்கறிஞர்கள் சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT