சீரான மின்​விநி​யோகத்துக்கு 7 பேர் கொண்ட குழு: மத்திய அரசு அமைத்தது

சீரான மின்​விநி​யோகத்துக்கு 7 பேர் கொண்ட குழு: மத்திய அரசு அமைத்தது
Updated on
1 min read

சென்னை: அதிகரித்து வரும் மின்தேவையைப் பூர்த்தி செய்வதற்காக, மின்விநியோகத்தை சீராக மேற்கொள்வதற்காக மத்திய அரசு 7 பேர் கொண்ட குழுவை அமைத்துள்ளது.

இதுகுறித்து, மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்ததாவது: மத்திய மின்துறை அமைச்சர் ஸ்ரீபாத யேசோ நாயக் அண்மையில் தமிழ்நாடு, ஆந்திரா, ராஜஸ்தான், மத்திய பிரதேசம், உத்தர பிரதேசம் மற்றும் மகாராஷ்டிரா ஆகிய மாநில மின்துறை அமைச்சர்களுடன் காணொலி மூலம் ஆலோசனை நடத்தினார்.

இக்கூட்டத்தில், நாடு முழுவதும் அதிகரித்து வரும் மின்தேவையை சமாளிப்பதற்காக, சீரான மின்விநியோகத்தை மேற்கொள்வதற்காக 7 பேர் கொண்ட குழு அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இக்குழு மாநில மின்துறை நிறுவனங்களின் பிரச்சினைகளை தீர்க்கும். குறிப்பாக, போதிய நிதி வழங்குதல், கடன்கள் மற்றும் பற்றாக்குறை ஆகியவற்றில் கவனம் செலுத்தும்.

மின்துறையில் தொழில்நுட்பங்களை மேற்படுத்த அதிகளவு முதலீடு செய்வது, சூரியஒளி மின்சாரத்தை அதிகளவு உற்பத்தி செய்வது குறித்து ஆலோசிக்கப்பட்டது.

மேலும், அனைத்து மாநிலங்களும் ஸ்மார்ட் மீட்டர் திட்டத்துக்கு மாற வேண்டும் என மத்திய அமைச்சர் அறிவுறுத்தினார். தமிழக மின்வாரியத்துக்கு தற்போது ரூ.1.6 லட்சம் கோடி கடன் உள்ளது. இதற்காக, ஆண்டுதோறும் ரூ.17 ஆயிரம் கோடி வட்டி செலுத்தப்பட்டு வரப்படுகிறது.

இக்கூட்டத்தில், தமிழக மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி பங்கேற்று தமிழக மின்வாரியத்தில் செய்யப்பட்டுள்ள சீர்த்திருத்தங்கள் குறித்து எடுத்துரைத்தார். ஸ்மார்ட் மீட்டர் பொருத்துவதன் மூலம், வருவாய் அதிகரித்து வருவது குறித்து எடுத்துக் கூறினார். இவ்வாறு அதிகாரிகள் தெரிவித்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in