பிப்.13, 14-ல் போக்குவரத்து ஊழியர் ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தை

பிப்.13, 14-ல் போக்குவரத்து ஊழியர் ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தை
Updated on
1 min read

போக்குவரத்து ஊழியர்களின் புதிய ஊதிய ஒப்பந்தம் உள்ளிட்ட கோரிக்கைகள் குறித்த இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை வரும் பிப்.13, 14-ம் தேதிகளில் சென்னை குரோம்பேட்டையில் நடைபெற உள்ளது.

தமிழக அரசு போக்குவரத்து கழகங்களில் 1.23 லட்சம் பேர் பணியாற்றி வருகின்றனர். இவர்களுக்கான 14-வது ஊதிய ஒப்பந்தம் முடிந்து ஓராண்டுக்கு மேலாகியும், அடுத்த ஊதிய ஒப்பந்தம் ஏற்படுத்தாமல் உள்ளது. முதல்கட்ட முத்தரப்பு பேச்சு, சென்னை குரோம்பேட்டையில் கடந்த ஆண்டு ஜூலை 27-ம் தேதி நடைபெற்றது. அடுத்தகட்ட பேச்சுவார்த்தை நடைபெறாமல், தொழிற்சங்கங்கள் மத்தியில் அதிருப்தி ஏற்படுத்தி உள்ளது. மேலும், வேலைநிறுத்தம் உள்ளிட்ட போராட்டங்களை நடத்த திட்டமிட்டுள்ளன.

இந்நிலையில், போக்குவரத்து ஊழியர்களின் புதிய ஊதிய ஒப்பந்தம் உள்ளிட்ட கோரிக்கைகள் குறித்த இரண்டாம்கட்ட பேச்சு வரும் பிப்.13, 14-ம் தேதிகளில் சென்னை குரோம்பேட்டையில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு சங்கம் சார்பிலும் ஒருவர் மட்டுமே அனுமதிக்கப்பட உள்ளனர். மேலும், பேச்சுவார்த்தையில் கலந்து கொள்ளும் பிரதிநிதி தங்களுக்கு வழங்கப்பட்டுள்ள அடையாள அடையுடன் வர வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் தலைமையில் இந்த பேச்சுவார்த்தை நடைபெற உள்ளதால், விரைவில் புதிய ஊதிய ஒப்பந்தம் ஏற்படுத்த வாய்ப்புள்ளதாக போக்குவரத்து கழக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in