

ராமேசுவரம்: தமிழக மீனவர்கள் 14 பேர் இலங்கை கடற்படையினரால் ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டனர்.
ராமேசுவரம் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து சனிக்கிழமை சுமார் 500 விசைப்படகுகளில் 2,500க்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலுக்குச் சென்றனர். மீனவர்கள் வடக்கு மன்னார் கடற்பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்த போது ஜான்போஸ், சுதன் ஆகிய இருவருக்குச் சொந்தமான இரண்டு விசைப்படகுகள், இலங்கை கடற்படையினரால் நள்ளிரவில் சிறைப்பிடிக்கப்பட்டன.
இரண்டு விசைப்படகுகளையும் பறிமுதல் செய்த இலங்கை கடற்படையினர், படகுகளிலிருந்த ஜான் போஸ், அந்தோணி, நிலாகரன், நிகிதன், சேசு பூங்காவனம், சந்தியா, கார்லோஸ், நிஷாந்த், டூவிஸ்டன், அய்யாவு, அந்தோணி டிமக், அருளானந்தம், ஜெலஸ்டின், ஆரோன் ஆகிய 14 மீனவர்களையும் இரணை தீவு கடற்படை முகாமிற்கு கொண்டு சென்று, பின்னர் அங்கிருந்து யாழ்பபாணம் மாவட்ட மீன்வளத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டனர். 14 மீனவர்களும் கிளிநொச்சி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, வவுனியா சிறையில அடைக்கப்பட உள்ளனர்.
கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 10 படகுகள் சிறைப்பிடிக்கப்பட்டு 88 தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டடுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.