‘செட்டிங்’ செய்கிறார்களோ? - இபிஎஸ் ஆக்கபூர்வமாக செயல்பட அமைச்சர் ரகுபதி அறிவுரை

அமைச்சர் ரகுபதி, எடப்பாடி பழனிசாமி
அமைச்சர் ரகுபதி, எடப்பாடி பழனிசாமி
Updated on
1 min read

சென்னை: “கடந்த சில நாட்களாக எடப்பாடி முன்வைத்த குற்றச்சாட்டுகளான அண்ணாநகர் பாலியல் வழக்கு, காரில் திமுக கொடிகட்டிய ரவுடிகள் தொடங்கி நேற்றைய கள்ளச் சாராய வீடியோ வரை குற்றச்சாட்டுகள் அனைத்திலும் அடுத்த நாளே அவர்கள் அதிமுகவினர் எனத் தெரியவந்து, கைது செய்யப்படுகிறார்கள். இப்படிப்பட்ட மலிவான அரசியல் செய்வதை விடுத்து எடப்பாடி பழனிச்சாமி ஆக்கபூர்வமான எதிர்கட்சித் தலைவராக செயல்படுவாரா?” என்று தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி கேள்வி எழுப்பியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப் பதிவில், “சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகில் வளையமாதேவியில் டாஸ்மாக் பாரில் கள்ளச் சாராயம் விற்கப்படுவதாக வீடியோ ஒன்று வெளியானது. அதனை எடப்பாடி பழனிசாமி தனது எக்ஸ் பதிவில் வெளியிட்டு ‘அய்யகோ, திமுகவை பாருங்கள்’ என்று எழுதியிருந்தார்.இந்த வீடியோவின் உண்மைத்தன்மையை ஆராய்ந்தால் வீடியோவை வெளியிட்டது அதிமுகவின் அண்ணா தொழிற்சங்க வட்ட செயலாளராக இருந்த ராஜாவின் உறவினரான ரவி என்பவர் என்பதும் அவருக்கு கள்ளச் சாராயம் வாங்கி வந்து கொடுத்ததே அதிமுகவின் ராஜா தான் என்பதும் விசாரணையில் தெரியவந்து அந்த அதிமுக பிரமுகர் ராஜா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

கடந்த சில நாட்களாக எடப்பாடி முன்வைத்த குற்றச்சாட்டுகளான அண்ணாநகர் பாலியல் வழக்கு, காரில் திமுக கொடிகட்டிய ரவுடிகள் தொடங்கி நேற்றைய கள்ளச் சாராய வீடியோ வரை குற்றச்சாட்டுகள் அனைத்திலும் அடுத்த நாளே அவர்கள் அதிமுகவினர் எனத் தெரிய வருகிறது; கைது செய்யப்படுகிறார்கள்.பாம் வைப்பதும் நானே எடுப்பதும் நானே என்ற கணக்கில் அவசர அவசரமாக எடப்பாடி ட்வீட் செய்வதும், அதனை அதிமுகவினர் பரப்புவதும் உண்மை வெளியானவுடன் அமைதி காப்பதும் என ஒரே ‘பேட்டர்ன்’தான். ஒரு அஜெண்டாவுடனேயே செயல்பட்டு வருகிறார்.

எதிர்க்கட்சித் தலைவர் என்பது அரசியலில் முக்கியமான பொறுப்பு. ஆனால் சொந்த கட்சியினர் ஒரு குற்றத்தில் ஈடுபட்டது தெரிய வந்தால் உடனே அரசை குறை கூறி ஒரு அறிக்கையை வெளியிட்டு அந்த சம்பவத்தையே திசை மாற்றி மக்களை குழப்பும் பணியைத்தான் எடப்பாடி செய்து வருகிறார். ஒருவேளை ‘செட்டிங்’ செய்கிறார்களோ என்றும் சந்தேகம் வருகிறது. இப்படிப்பட்ட மலிவான அரசியல் செய்வதை விடுத்து எடப்பாடி பழனிச்சாமி ஆக்கபூர்வமான எதிர்கட்சித் தலைவராக செயல்படுவாரா?” என்று அவர் கூறியுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in