விழுப்புரம் ஆட்சியராக பொறுப்பேற்ற ஷேக் அப்துல் ரஹ்மான்.
விழுப்புரம் ஆட்சியராக பொறுப்பேற்ற ஷேக் அப்துல் ரஹ்மான்.

3 மாதங்களில் காட்டு நாயக்கன் சான்றிதழ் வழங்க நடவடிக்கை: விழுப்புரம் புதிய ஆட்சியர் உறுதி

Published on

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டத்தின் புதிய ஆட்சியராக இன்று (புதன்கிழமை) பொறுப்புபேற்றுக் கொண்ட ஷேக் அப்துல் ரகுமான், காட்டு நாயக்கன் சான்றிதழ் வேண்டி விண்ணப்பித்தவர்களுக்கு 3 மாதங்களுக்குள் சான்றிதழ் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்துள்ளார்.

விழுப்புரம் மாவட்ட ஆட்சியராக பணிபுரிந்த பழனி அண்மையில் ஆட்சியர்கள் பணியிட மாற்றத்தின்போது இடமாற்றம் செய்யப்பட்டார். அவர் இந்து சமய அறநிலையத் துறை கூடுதல் ஆணையாளராக நியமிக்கப்பட்டுள்ளார். விழுப்புரம் ஆட்சியராக நகராட்சி நிர்வாக கூடுதல் ஆணையராக பணியாற்றி வந்த ஷேக் அப்துல் ரகுமான் நியமிக்கப்பட்டார். அரசின் பொதுத்துறை துணை செயலாளராக பணியாற்றி வந்த பத்மஜா மாவட்ட கூடுதல் ஆட்சியராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். இவர் விழுப்புரம் ஆட்சியர் ஷேக் அப்துல் ரகுமானின் மனைவியாவார்.

இதனால் விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் மற்றும் கூடுதல் ஆட்சியர் பதவிகளை ஷேக் அப்துல் ரகுமான் மற்றும் பத்மஜா வகிக்கின்றனர். கூடுதல் ஆட்சியராக (வளர்ச்சி) இருந்த ஸ்ருதஞ் ஜெய்நாராயணன் தமிழக அரசின் மின் ஆளுமை முகமை கூடுதல் இயக்குனராக பணி நியமிக்கப்பட்டுள்ளார்.

விழுப்புரம் மாவட்டத்தின் 23-வது ஆட்சியராக ஷேக் அப்துல் ரகுமான் இன்று பொறுப்பேற்றுக்கொண்ட பின் ஆட்சியர் அலுவலக வளாகத்தில் மரக்கன்று ஒன்றை நட்டார். முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூறுகையில், "விழுப்புரம் மாவட்ட மக்கள் எந்த குறைபாடுகள், குறைகள் இருந்தாலும் என்னை நேரடியாக அணுகலாம். விவசாயம் சார்ந்த தொழில்கள், கால்நடை வளர்ப்பு போன்றவற்றுக்கு பிரதான முக்கியத்துவம் அளிக்கப்பட்டு, மக்களின் கோரிக்கைகள், தேவைகள் என்னென்ன என்பதை ஆராய்ந்து அதைப் பூர்த்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.

பெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் சீரமைப்புப் பணிகளைத் துரிதப்படுத்தி, மக்களுக்கு பேரிடரிலிருந்து மீட்கும் அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்ளப்படும். அரசால் அறிவிக்கப்பட்ட திட்டங்களைத் துரிதப்படுத்தி, மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வருவதற்காக ஓரணியாக இணைந்து பணியாற்றுவோம். மாவட்டத்தின் வளர்ச்சிக்கு எது முக்கியத்துவமோ, அதில் கூடுதல் கவனம் செலுத்தப்படும்.

அரசின் நலத்திட்டங்கள் மக்களிடம் முழுமையாக சென்றடையும் வகையில் பணிகள் மேற்கொள்ளப்படும். காட்டு நாயக்கன் சான்றிதழ் வேண்டி விண்ணப்பித்தவர்களின் விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு 3 மாதங்களில் சான்றிதழ் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்." என்று தெரிவித்தார்.

மேலும் "மாவட்டத்தின் தொழில்வளர்ச்சிக்காக சிட்கோ, சிப்காட், தகவல் தொழில்நுட்பப் பூங்கா, மினி டைடல் பார்க் ஆகியவை அமைந்துள்ள நிலையில், அதன் மூலம் மாவட்டத்தைச் சேர்ந்தவர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்" என்றார்.

பொறியியல் பட்டதாரியான ஷேக் அப்துல் ரஹ்மான், 2017-ம் ஆண்டில் இந்திய ஆட்சிப்பணி அலுவலராகத் தேர்வு செய்யப்பட்டு திண்டுக்கல் மாவட்டத்தில் தனது பயிற்சியைத் தொடங்கினார். இதைத் தொடர்ந்து 2019-ம் ஆண்டில் குளித்தலை சார் ஆட்சியராகவும், 2021-ம் ஆண்டில் சேலம் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமைத் திட்டக் கூடுதல் ஆட்சியராகவும், 2021 நவம்பர் முதல் 2023 அக்டோபர் வரை சென்னை மாநகராட்சி துணை ஆணையராகவும், 2023 அக்டோபர் முதல் 2024, ஜூன் வரை ஆவடி மாநகராட்சி ஆணையராகவும் பணியாற்றி ஷேக் அப்துல் ரஹ்மான் பணியாற்றியுள்ளார். கடந்த 2024 ஜூன் மாதம் முதல் நகராட்சி நிர்வாகத்துறை இணை ஆணையராகவும் பணியாற்றினார்.

சென்னை வில்லிவாக்கத்தை பூர்வீகமாகக் கொண்டவர் ஷேக் அப்துல் ரஹ்மான். இவரது மனைவி பத்மஜா, விழுப்புரம் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமைத் திட்டக் கூடுதல் ஆட்சியராக நியமிக்கப்பட்டுள்ளார். இவரும் விரைவில் பொறுப்பேற்க உள்ளார். ஆட்சியர் ஷேக் அப்துல் ரஹ்மானுக்கு ஊரக வளர்ச்சி முகமைத் திட்டக் கூடுதல் ஆட்சியர் ஸ்ருதஞ் ஜெய் நாராயணன், திண்டிவனம் சார் ஆட்சியர் திவ்யான்ஷி நிகம், மாவட்ட வருவாய் அலுவலர் ஹரிதாஸ், ஆட்சியரின் நேர்முக உதவியாளர் யோகஜோதி உள்ளிட்ட அரசு அலுவலர்கள் வாழ்த்துகளைத் தெரிவித்தனர்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in