Published : 05 Feb 2025 01:56 PM
Last Updated : 05 Feb 2025 01:56 PM

‘மாநில அரசுக்கு கட்டுப்பட்டே..’ - மோடியே சொல்லிவிட்டார் இனி ஆளுநர் என்ன செய்வார்? - அமைச்சர் ரகுபதி

அமைச்சர் ரகுபதி | கோப்புப்படம்

சென்னை: “மாநில அரசுக்கு கட்டுப்பட்டு ஆளுநர் செயல்பட வேண்டும் என்ற சட்டப்படியான உண்மையை பிரதமர் மோடியே ஒத்துக்கொள்கிறார். இனி என்ன சொல்லப் போகிறீர்கள் ஆளுநர் ரவி?” என்று தமிழக சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி கேள்வி எழுப்பியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “நாடாளுமன்றத்தில் அவை மரபுகளை பற்றி பேசி சிலாகிக்கும் மோடிக்கு பாஜக ஆளாத மாநிலங்களின் சட்டமன்ற மரபுகளை ஆளுநர்கள் எவ்வாறு சிதைக்கின்றனர் என்பது தெரியாதா? தமிழகத்தில் மோடி நியமித்திருக்கும் ஆளுநர் ரவியோ, தமிழக அரசின் உரையை வாசிப்பது கூட இல்லை.

ஆளுநரோடு முரண்பட்ட போதிலும் பேரவை நாகரிகம் கருதி தமிழக முதல்வர் ஆளுநருக்கு மதிப்பளித்து சட்டப்பேரவையில் உரையாற்ற சபாநாயகர் மூலம் அழைப்பு விடுத்தார். ஆனால் நாகரிகம் என்றால் கிலோ எத்தனை ரூபாய் என கேட்கும் அளவு நடந்து கொள்ளும் ஆளுநர் ரவி பேரவை மாண்பை மதிக்காமல் உரையை படிக்காமல் உதாசீனப்படுத்தினார்.

சட்டப்படி மாநில அரசு தயாரித்து கொடுக்கும் உரையை தான் ஆளுநர் வாசிக்க வேண்டும் அதை தான் நாம் வலியுறுத்தினோம். மாநில அரசுக்கு கட்டுப்பட்டு ஆளுநர் செயல்பட வேண்டும் என்ற சட்டப்படியான உண்மையை பிரதமர் மோடியே ஒத்துக்கொள்கிறார். இனி என்ன சொல்லப் போகிறீர்கள் ஆளுநர் ரவி?” என்று அவர் பதிவிட்டுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x