மக்களவை உறுப்பினருக்கு மரியாதை தரவில்லையா..? - திகுதிகு சர்ச்சையில் திமுக மாவட்டச் செயலாளர்

உதயநிதிக்கு மலையரசன் நினைவுப் பரிசு வழங்கியபோது...
உதயநிதிக்கு மலையரசன் நினைவுப் பரிசு வழங்கியபோது...
Updated on
2 min read

2024 மக்களவைத் தேர்தலில் நிச்சயம் வெற்றி கிட்டும் என அதிமுக தீர்க்கமாக நம்பிய தொகுதி கள்ளக்குறிச்சி. அப்படிப்பட்ட தொகுதியில் திமுக வலுவான வேட்பாளரை தேடிப்பிடித்து நிறுத்தும் என அனைவரும் எதிர்பார்த்திருந்த நிலையில், பேரூர் கழகச் செயலாளரான மலையரசனை நிறுத்தியது திமுக.

இவரை அடையாளம் காட்டியவர் கள்ளக்குறிச்சி தெற்கு மாவட்ட திமுக செயலாளரும் எம்எல்ஏ-வுமான வசந்தம் கார்த்திகேயன். புதுமுகம் என்றபோதும், 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வாகை சூடினார் மலையரசன். இப்போது, மலையரசனை முடக்கிப் போட முயற்சிப்பதாக வசந்தம் கார்த்திகேயனுக்கு எதிராகவே வருத்தங்கள் வட்டமடிக்கின்றன.

எம்​பி-யாக வெற்றி​பெற்று எதைச் சாதித்​தோம். இதற்கு பேசாமல் பேரூர் கழகச் செயலாளராக இருந்து கொண்டு காண்ட்​ராக்ட் பணிகளை பார்த்து நாலு காசு பார்த்து​விட்டுப் போயிருக்​கலாமே என்ற மனநிலையில் மலையரசன் இப்போது இருப்பதாக அவரது ஆதரவாளர்கள் சொல்கிறார்கள்.இதுகுறித்துப் பேசிய அவர்கள், “அரசு நிகழ்ச்​சிகளில் எம்பி என்ற முறையில் மலையரசனுக்கு உரிய முக்கி​யத்துவம் கொடுத்துப் பேசவிடு​வ​தில்லை. அவருக்கான இருக்கையையே மேடையில் ஒரு ஓரமாகத்தான் போடுகிறார்கள்.

கட்சிக் கூட்டங்​களில் அவரை மேடை ஏறவிடாமல் தடுத்த நிகழ்வு​களும் உண்டு. அக்டோபரில் கள்ளக்​குறிச்​சிக்கு உதயநிதி ஸ்டாலின் வந்தார். அவரைச் சந்திக்க ஆட்சியர் அலுவல​கத்​துக்குச் சென்றிருக்​கிறார் மலையரசன். அப்போது வசந்தம் கார்த்தி​கேயனும், வடக்கு மாவட்டச் செயலாளரான உதயசூரியன் எம்எல்​ஏ-வும் உள்ளே இருந்​திருக்​கிறார்கள். வெளியில் இருந்​தவர்கள் மலையரசனை உள்ளே விட மறுத்​திருக்​கிறார்கள்.

அதனால், அறைக்கு வெளியே காத்திருந்த மலையரசன், உதயநிதி வெளியே வந்த பிறகு நினைவுப் பரிசை கொடுத்து​விட்டு வந்திருக்​கிறார். இந்த நிகழ்வுக்குப் பிறகு, மேடைகளில் மலையரசனை மக்களவை உறுப்​பினர் என்று சொல்லாமல் வெறுமனே மலையரசன் என்று மட்டும் சொல்ல ஆரம்பித்து​விட்​டார்கள்” என்றார்கள்.

சொந்தக் கட்சிக்​குள்​ளேயே, தான் உதாசீனப்​படுத்​தப்​படுவதை மலையரசனால் எதிர்த்துக் கேட்க​முடியாத நிலையில், அதிமுக-​வினர் அவருக்காக வக்காலத்து வாங்கிப் பேசி வருகிறார்கள். இவரை எதிர்த்து போட்டி​யிட்டு தோற்ற அதிமுக மாவட்டச் செயலாளர் குமரகுரு அண்மையில் எம்ஜிஆர் பிறந்​தநாள் விழா கூட்டத்தில் பேசும்​போது, “என்னை எதிர்த்து வெற்றி​பெற்று விட்டீர்கள்.

ஆனால், உங்களால் சுதந்​திரமாக செயல்பட முடிய​வில்​லையே. அரசு நிகழ்ச்​சிகளில் ஏன் உங்கள் உரிமைகளை விட்டுக் கொடுக்​கிறீர்கள்? எதற்காக அடிமையாக இருக்​கிறீர்கள்? இதற்குத்தான் உங்களை மக்கள் வெற்றி​பெறச் செய்தார்களா? உங்களுக்கு வக்காலத்து வாங்க நான் இருக்​கிறேன். தைரியமாக செயல்​படுங்கள்” எனப் பேசினார்.

கட்சிக்குள் எதிர்​கொள்ளும் சங்கடங்கள் குறித்து மலையரசனிடம் கேட்டதற்கு, “‘அகழ்​வாரைத் தாங்கும் நிலம்​போலத் தம்மை இகழ்வார்ப் பொறுத்தல் தலை’ என்ற வள்ளுவன் காட்டிய வழியில் பயணிக்​கின்​றேன். கார்த்தி​கேயன் எனக்கு மாவட்டச் செயலாளர். கட்சிக் கட்டுப்​பாட்டை மீறுவது தொண்ட​னுக்கு அழகல்ல.

நான் பாரம்பரிய திமுக-​காரன். எதையும் தாங்கும் இதயம் இது. எனது மாமனார் தியாக​ராஜனின் கட்சிப் பணிகள் குறித்து அண்ணா, கலைஞர், முதல்வர் உள்ளிட்டோர் அறிவர். 2016 தேர்தலில் கார்த்தி​கேயனின் வெற்றிக்கு நான் உழைத்​தேன். 2024-ல் எனது வெற்றிக்கு அவர் பங்களித்​திருக்​கிறார். கட்சி நலனைக் கருத்தில் கொண்டு எதையும் அதிகம் பேச விரும்ப​வில்லை” என்றார்.

மலையரசனை நீங்கள் புறக்​கணிக்​கிறீர்​களாமே என்று வசந்தம் கார்த்தி​கேயனிடம் கேட்டதற்கு, “அவர் எங்கள் கட்சி வேட்பாளராக அறிவித்தது. அப்புறம் தான் மற்றவை. அவரை வெற்றி​பெறச் செய்ததில் எனக்கும் பங்குண்டு. அவருக்கான மரியாதையை எங்கும் நான் விட்டுக்​கொடுத்​த​தில்லை; விட்டுக்​கொடுக்​கவும் மாட்டேன். துணை முதல்வர் வந்தபோது, அவரை நாங்கள் இருவரும் சேர்ந்து தான் வரவேற்​றோம். அப்படி இருக்கையில் அவரை நான் புறக்​கணிப்​ப​தாகக் கூறுவதெல்லாம் அதிமுக-​வினர் அவிழ்த்து​விடும் கட்டுக்கதை” என்றார்​.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in