

நாகர்கோவில்: விண்வெளித் துறையில் இந்தியா மேலும் பல சாதனைகளை படைக்கும் என சொந்த கிராமத்தில் மக்களின் பாராட்டு விழாவில் இஸ்ரோ தலைவர் நாராயணன் பேசினார்.
இஸ்ரோ தலைவர் விஞ்ஞானி வி.நாராயணன் கன்னியாகுமரி மாவட்டம் நகர்கோவிலை அடுத்துள்ள மேலக்காட்டுவிளை கிராமத்தை சேர்ந்தவர். ஏழை குடும்பத்தில் பிறந்த இவருக்கு இஸ்ரோ தலைவராக பொறுப்பேற்ற பின்னர் மேலக்காட்டுவிளையில், ஊர் மக்கள் சார்பில் பாராட்டு விழா நடைபெற்றது. விழாவுக்கு மேலக்காட்டுவிளை ஊர் தலைவர் செல்வகுமார் தலைமை வகித்தார்.
ஊர் மக்கள் ஒன்று சேர்ந்து வி.நாராயணனுக்கு ஆரத்தி எடுத்து பூரண கும்ப மரியாதை கொடுத்தனர். தனது கிராமத்தில் உள்ள பெற்றோரின் நினைவிடத்துக்குச் சென்று மரியாதை செலுத்திய அவர், அங்குள்ள கைலாசநாதர் கோயிலுக்கு சென்று சுவாமி தரிசனம் செய்தார். பின்னர் நிகழ்ச்சியில் பங்கேற்ற அவருக்கு குமரி மாவட்ட ஆட்சியர் அழகுமீனா, எஸ்பி ஸ்டாலின் ஆகியோர் திருக்குறள் புத்தகம் வழங்கி வாழ்த்து தெரிவித்தனர்.
விழாவில் இஸ்ரோ தலைவர் நாராயணன் பேசுகையில், “இஸ்ரோ தலைவராக என்னை தேர்வு செய்த பிரதமர் நரேந்திர மோடிக்கும், மத்திய அரசுக்கும் எனது நன்றியை தெரிவித்து கொள்கிறேன். இந்த பொறுப்பு மூலம் இந்திய நாட்டிற்கு என்னை பணியாற்றுவதற்காக எனக்கு வாய்ப்பு வழங்கிய இறைவன் மற்றும் பெற்றோர், எனது ஆசிரியர்களுக்கு நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.
இதற்கு முன்பு இஸ்ரோவை வழிநடத்தியவர்கள் பெரும் அறிஞர்கள் ஆவர். இஸ்ரோ தலைவர் பதவி கிடைக்க எனது தகுதியை விட, என்னுடன் பணியாற்றும் பணியாளர்களின் பங்கும் முக்கியமாகும். நூற்றுக்கும் மேற்பட்ட வெளிநாட்டு செயற்கை கோள்களை, இந்திய ராக்கெட்டுகள் மூலம் விண்வெளிக்கு அனுப்பி உள்ளோம். நாட்டின் பாதுகாப்பு, காலநிலை மாற்றம், இயற்கை பேரிடர் போன்றவற்றை கண்டறிந்து அவற்றை கையாள்வதில் விண்வெளித் துறை சாதனை படைத்து வருகிறது. தற்போது பாமர மக்களுக்கு ஏற்ற வகையில் விண்வெளித் துறை அமைந்துள்ளது.
ஸ்ரீஹரிகோட்டாவில் 3-வது ராக்கெட் ஏவுதளம் அமைப்பது, மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் திட்டம் போன்ற பல திட்டங்கள் நிறைவேற்றப்படவுள்ளது. விண்வெளித் துறையில் இந்தியா மேலும் பல சாதனைகளை படைக்கும். இறைவன் அருள், பெற்றோர் ஆசியுடன் கடின உழைப்பும் இருந்தால் வாழ்வில் எதையும் சாதிக்கலாம்” என்றார்.
விழாவில் முன்னாள் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன், மேயர் மகேஷ், எம்எல்ஏக்கள் மனோதங்கராஜ், எம்.ஆர்.காந்தி, ராஜேஷ்குமார், சாமித்தோப்பு தலைமைப்பதி குரு பாலபிரஜாபதி அடிகளார், சிஎஸ்ஐ பேராயர் செல்லையா, முன்னாள் அமைச்சர் சுரேஷ்ராஜன், முன்னாள் எம்பி ஹெலன் டேவிட்சன், மற்றும் திரளானோர் கலந்துகொண்டனர்.