“சர்வாதிகாரப் போக்குக்கு விரைவில் முற்றுப்புள்ளி” - ஆர்.பி.உதயகுமார் கைதுக்கு இபிஎஸ் கண்டனம் 

எடப்பாடி பழனிசாமி | கோப்புப்படம்
எடப்பாடி பழனிசாமி | கோப்புப்படம்
Updated on
2 min read

சென்னை: “மக்களின் பிரச்சனைகளுக்காக அதிமுக தொடர்ந்து போராடும். போராடும் மக்களின் கோரிக்கைகளுக்குத் தீர்வு காணாமல், போராடுபவர்களைக் கைது செய்யும் திமுக அரசின் முதல்வர் ஸ்டாலினின் சர்வாதிகாரப் போக்குக்கு மக்கள் விரைவில் முற்றுப்புள்ளி வைப்பார்கள்,” என்று முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கைதுக்கு கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கடந்த 44 மாத கால திமுக ஸ்டாலின் மாடல் ஆட்சியில், தமிழக மக்கள் தங்களின் தேவைக்காகவும், நலனுக்காகவும் வீதியில் இறங்கி போராடக் கூடிய அவலம் நாள்தோறும் அரங்கேறி வருகிறது. மக்களின் குறைகளைத் தீர்ப்பதற்கு பதிலாக, அவர்கள்மீது அடக்குமுறையை ஏவிவிடுவதை இந்த அரசு வாடிக்கையாகக் கொண்டுள்ளது. மக்களின் நலனை முன்னெடுத்து அதிமுக-வினர் ஆர்ப்பாட்டம் நடத்தினால், அவர்களைக் கைது செய்யும் போக்கு தொடர்கிறது.

மதுரை மாவட்டம், திருமங்கலத்தில் இருந்து ராஜபாளையம் வழியாக கொல்லம் வரை செல்லும் நான்கு வழிச் சாலை, திருமங்கலம் அருகே ஆலம்பட்டி வழியாகவும், தே. கல்லுப்பட்டி வழியாகவும் செல்கிறது. ஆலம்பட்டி நான்கு வழிச் சாலையில், சேடபட்டி விலக்கு பகுதியில் இருந்து ஆலம்பட்டி வரை, சாலை மேம்பாலம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இப்பாலத்துக்குக் கீழ் சுரங்கப் பாதை அமைக்கப்படாததன் காரணமாக, மக்கள் சாலையை கடக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

எனவே, பாலத்துக்குக் கீழ் சுரங்கப் பாதை அமைக்கக் கோரி அப்பகுதி மக்கள் இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணைய அதிகாரிகளுக்கும், திமுக அரசின் ஸ்டாலின் மாடல் அரசுக்கும் தொடர்ந்து கோரிக்கை வைத்து வந்தனர். அதன் தொடர்ச்சியாக, திருமங்கலம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ஆர்.பி.உதயகுமார், இக்கோரிக்கைகளை வலியுறுத்தி மதுரை மாவட்ட ஆட்சித் தலைவரை நேரில் சந்தித்து மனு அளித்துள்ளார்.

அதேபோல், மதுரை ராஜபாளையம் நான்கு வழிச் சாலையில் தே. கல்லுப்பட்டி காவேட்நாய்க்கன்பட்டி விலக்கில் மேம்பாலம் அல்லது தடுப்புடன் கூடிய (பேரிகார்டு) சிக்னல் அல்லது அணுகுசாலை அல்லது சுரங்கப் பாதை அமைத்துக் கொடுக்கக் கோரியும், மதுரை மாவட்ட ஆட்சித் தலைவருக்கு கடந்த ஆண்டு இப்பகுதி மக்கள் மனு அளித்துள்ளனர்.

திமுக-வின் ஸ்டாலின் மாடல் அரசோ, இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணைய அதிகாரிகளோ, இதுவரை இப்பிரச்சனைக்கு தீர்வுகாண எந்தவித நடவடிக்கையும் எடுக்காததைக் கண்டித்து இன்று (ஜன.30) காலை, முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் மக்களோடு மக்களாக கவன ஈர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். மக்களின் தன்னெழுச்சிக்கு பதில் அளிக்க இயலாத இந்த அரசின் ஏவல் துறையான காவல் துறை அடக்குமுறையை கட்டவிழ்த்து, அனைவரையும் கைது செய்துள்ளதற்கு, எனது கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

அதிமுக, மக்களின் பிரச்சனைகளுக்காகத் தொடர்ந்து போராடும். போராடும் மக்களின் கோரிக்கைகளுக்குத் தீர்வு காணாமல், போராடுபவர்களைக் கைது செய்யும் திமுக அரசின் முதல்வர் ஸ்டாலினின் சர்வாதிகாரப் போக்குக்கு மக்கள் விரைவில் முற்றுப்புள்ளி வைப்பார்கள்,” என்று அவர் கூறியுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in