காரைக்கால், தமிழக மீனவர்கள் 13 பேர் இலங்கை கடற்படையினரால் கைது

கைது செய்யப்பட்ட மீனவர்களை விடுவிக்கக் கோரி கதறி அழுத காரைக்கால் மாவட்ட மீனவர்களின் குடும்பத்தார்.
கைது செய்யப்பட்ட மீனவர்களை விடுவிக்கக் கோரி கதறி அழுத காரைக்கால் மாவட்ட மீனவர்களின் குடும்பத்தார்.
Updated on
1 min read

காரைக்கால்: காரைக்காலில் இருந்து கடலுக்குள் மீன்பிடிக்கச் சென்ற காரைக்கால், தமிழக மீனவர்கள் 13 பேரை இலங்கை கடற்படையினர் நேற்று (ஜன.27) இரவு கைது செய்தனர்.

காரைக்கால் மாவட்டம் கிளிஞ்சல்மேடு மீனவ கிராமத்தை சேர்ந்த ஆனந்தவேல் என்பவருக்குச் சொந்தமான விசைப்படகில் அதே ஊரைச் சேர்ந்த மாணிக்கவேல், தினேஷ், காரத்திகேசன், செந்தமிழ், பட்டினச்சேரியை சேர்ந்த மைவிழிநாதன், வெற்றிவேல், தமிழகத்தின் மயிலாடுதுறை மாவட்டம் சந்திரப்பாடியை சேர்ந்த நவெந்து, வானகிரியை சேர்ந்த ராஜேந்திரன், ராம்கி, நாகை மாவட்டம் நம்பியார் நகர் சசிகுமார், நந்தகுமார், பாபு, குமரன் ஆகிய 13 பேர் கடந்த 26-ம் தேதி காலை 10 மணியளவில் காரைக்கால் மீன்பிடி துறைமுகத்திலிருந்து கடலுக்குள் மீன்பிடிக்கச் சென்றனர். நேற்று இரவு 9.30 மணியளவில் கோடியக்கரைக்கு அருகே இந்திய கடல் எல்லைக்குள் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது, எல்லை தாண்டி மீன்பிடித்ததாக இலங்கை கடற்படையினரால் 13 மீனவர்களும் விசைப்படகுடன் கைது செய்யப்பட்டனர்.

மீனவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கும் விதமாக இலங்கை கடற்படையினர் துப்பாக்கியால் சுட்டபோது படகிலிருந்து தவறி கடலில் விழுந்த இரண்டு மீனவர்கள் காயமடைந்ததாக கூறப்படுகிறது.

அண்மைக் காலமாக தொடர்ச்சியாக காரைக்கால், தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையால் கைது செய்யப்படுவது மீனவர்களிடையே அச்சத்தையும், வேதனையையும் ஏற்படுத்தியுள்ளது.

கைது செய்யப்பட்ட மீனவர்களையும், இதுவரை இலங்கை கடற்படையால் பறிமுதல் செய்து வைக்கப்பட்டுள்ள மீன்பிடி படகுகளையும் உடனடியாக விடுவிக்க மத்திய, மாநில அரசுகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என காரைக்கால் மாவட்ட மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in