சனாதனம் தொடர்பான கருத்து: உதயநிதிக்கு எதிரான வழக்குகள் தள்ளுபடி

சனாதனம் தொடர்பான கருத்து: உதயநிதிக்கு எதிரான வழக்குகள் தள்ளுபடி
Updated on
1 min read

புதுடெல்லி: சனாதன தர்மம் தொடர்பான உதயநிதி ஸ்டாலினின் கருத்து, அரசியலமைப்பு சட்டத்தின் அடிப்படை உரிமைகள் எதையும் மீறவில்லை என நீதிபதிகள் தெரிவித்ததையடுத்து அவருக்கு எதிராக தொடரப்பட்ட வழக்குகள் திரும்ப பெறப்பட்டன. இதையடுத்து, மனுக்களை தள்ளுபடி செய்து உச்ச நீதிமன்றம் உத்தரவி்ட்டுள்ளது.

சென்னையில் கடந்த 2023-ம் ஆண்டு செப்டம்பரில் நடைபெற்ற தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கம் நடத்திய சனாதன எதிர்ப்பு மாநாட்டில் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்று பேசினார். இதில் அவர் சனாதனம் குறித்து தெரிவித்த கருத்து சர்ச்சைக்குள்ளானது. இதையடுத்து உதயநிதி ஸ்டாலினுக்கு எதிராக வழக்கறிஞர் பி.ஜெகந்நாத் உள்ளிட்டோர் 3 வழக்குகளை உச்ச நீதிமன்றத்தில் தொடர்ந்தனர். அதில், சனாதன தர்மம் தொடர்பான உதயநிதியின் பேச்சு அரசியலமைப்பு சாசனத்துக்கு எதிரானது என அறிவி்க்க வேண்டும் என்றும், இதற்காக உதயநிதி மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க தமிழக டிஜிபிக்கு உத்தரவிட வேண்டும் என்றும் கோரப்பட்டிருந்தது.

இந்த வழக்கு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் பீலா எம்.திரிவேதி, பிரசன்னா பி.வரலே ஆகியோர் அடங்கிய அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர்கள் தரப்பில் மூத்த வழக்கறிஞர் தாமா சேஷாத்ரி நாயுடு, தமிழக அரசு தரப்பில் மூத்த வழக்கறிஞர் முகுல் ரோஹ்தகி, உதயநிதி ஸ்டாலின் தரப்பில் மூத்த வழக்கறிஞர் பி.வில்சன் ஆகியோர் ஆஜராகி வாதிட்டனர்.

அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், உதயநிதி ஸ்டாலினின் சனாதனம் குறித்த கருத்து, அரசியலமைப்பு சட்டத்தின் அடிப்படை உரிமைகள் எதையும் மீறவில்லை. எனவே இந்த மனுக்கள் விசாரணைக்கு உகந்தது அல்ல என்பதால் தள்ளுபடி செய்யப்போகிறோம் என்றனர். அதையடுத்து இந்த வழக்குகளை திரும்பப் பெறுவதாக மனுதாரர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அதையேற்ற நீதிபதிகள் உதயநிதி ஸ்டாலினுக்கு எதிரான வழக்குகளை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in