

சென்னை: ஓய்வு பெறும் நிலையில், 59 வயது நிரம்பிய போலீஸாருக்கு அவர்கள் பணி ஓய்வு பெறும் வரை இரவுப் பணியிலிருந்து விலக்களித்து சென்னை காவல் ஆணையர் அருண் உத்தரவிட்டுள்ளார். ஓய்வு பெறும் வயதை நெருங்கும் போலீஸார் வயது மூப்பு மற்றும் உடல் நல பிரச்சினைகளால் அவதியுறுகின்றனர்.
இந்நிலையில், காவல் ஆணையர் அருண் நேற்று உத்தரவு ஒன்றை பிறப்பித்தார். அதில், சென்னை பெருநகர காவல் துறையில் ஓராண்டு காலத்துக்குள் பணி ஓய்வு பெறவுள்ள 59 வயது நிரம்பிய போலீஸாரின் வயது மூப்பையும், நீண்ட பணி காலத்தில் அவர்கள் அர்ப்பணிப்புடன் ஆற்றிய மக்கள் பணியையும், கடின உழைப்பையும் கருத்தில் கொண்டு, 59 வயது நிரம்பிய காவலர் முதல் சிறப்பு சார்பு ஆய்வாளர் வரையிலான அனைத்து போலீஸாருக்கும் இரவு பணியிலிருந்து விலக்கு அளிக்கப்படுகிறது.
இந்த விலக்கு அவர்கள் பணி ஓய்வு பெறும் வரை அமலில் இருக்கும். இந்த உத்தரவை அனைத்து போலீஸ் அதிகாரிகளும் கடைபிடிக்க வேண்டும். இவ்வாறு ஆணையர் தெரிவித்துள்ளார்.