“பெரியாறு அணையை உடைக்க நினைத்தால்...” - தமிழக விவசாயிகள் ஆவேசம்

தமிழக-கேரள எல்லையான லோயர்கேம்ப்பில் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபடுவதற்காக பேரணியாக சென்ற விவசாயிகள் | படங்கள் : நா. தங்கரத்தினம்.
தமிழக-கேரள எல்லையான லோயர்கேம்ப்பில் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபடுவதற்காக பேரணியாக சென்ற விவசாயிகள் | படங்கள் : நா. தங்கரத்தினம்.
Updated on
2 min read

கூடலூர்: முல்லைப் பெரியாறு அணையை உடைக்க நினைத்தால் ஒவ்வொரு விவசாயியும் போர்வீரனாக மாறி போராட்டத்தில் ஈடுபடுவோம் என்று லோயர்கேம்ப்பில் நடந்த போராட்டத்தில் சங்க நிர்வாகிகள் பேசினர்.

முல்லைப் பெரியாறு அணையின் பராமரிப்புக்கும், கண்காணிப்புக்கும் உச்ச நீதிமன்றம் மத்திய கண்காணிப்புக் குழுவை நியமித்து இருந்தது. இந்நிலையில் இக்குழு கலைக்கப்பட்டு கடந்த நவம்பரில் தேசிய அணைகள் பாதுகாப்பு ஆணையத்தின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. இதனைத் தொடர்ந்து மத்திய நீர்வள ஆணையம் 7பேர் கொண்ட புதிய மேற்பார்வைக் குழுவை நியமித்தது.

இதில் தேசிய அணைகள் பாதுகாப்பு ஆணைய தலைவர் அனில்ஜெயின் தலைமையில் இருமாநிலத்தைச் சேர்ந்த தலா இரண்டு அதிகாரிகள், 2 தொழில்நுட்ப விஞ்ஞானிகள் என்று மொத்தம் 7 பேர் உள்ளனர். இதில் கேரள தரப்பில் உள்ள அதிகாரிகளை நீக்கம் செய்ய வேண்டும் என்று பெரியாறு வைகை பாசன விவசாயிகள் உள்ளிட்ட பல்வேறு தமிழக விவசாயிகள் சங்கங்கள் எதிர்ப்பு தெரிவித்து வந்தன.

இந்நிலையில், இக்கோரிக்கையை வலியுறுத்தி தமிழக கேரள எல்லையான லோயர்கேம்ப்பில் இன்று (ஜன.25) முற்றுகைப் போராட்டம் நடைபெற்றது. பெரியாறு வைகை பாசன விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்பாளர் பென்னிகுவிக் பாலசிங்கம் தலைமை வகித்தார். தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்க நிறுவனர் ஈசன்முருகசாமி, துணைப் பொதுச் செயலாளர் உசிலைநேதாஜி, தாய் தமிழர் கட்சி மாவட்டச் செயலாளர் சுரேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

பேருந்து நிறுத்தத்தில் இருந்து பேரணியாக கிளம்பிய ஊர்வலம் பென்னிகுவிக் மணிமண்டபம் அருகே முடிந்தது. தொடர்ந்து முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டு கேரளாவை நோக்கி செல்ல முயன்ற விவசாயிகளை போலீஸார் தடுத்து நிறுத்தினர். பின்பு அப்பகுதியில் விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் நிர்வாகிகள் பேசியதாவது: “40 ஆண்டுகளாக கேரள அரசு பெரியாறு அணைக்கு எதிரான விஷயங்களை பரப்பி வருகிறது. தொடர்ந்து காந்திய வழியிலே போராடி வருகிறோம்.

எங்களின் பொறுமையை சோதிக்க வேண்டாம். அணையை உடைக்க நினைத்தால் ஒவ்வொரு விவசாயியும் போர்வீரனாக மாறுவோம். பால் உள்ளிட்ட அனைத்து பொருட்களும் இங்கு இருந்து தான் கேரளாவுக்கு செல்கிறது. 2011-ம் ஆண்டு போல ஒரு போராட்டத்தில் ஈடுபடவும் தயங்க மாட்டோம். ஆகவே மாவட்ட நிர்வாகமும், தமிழக அரசும் அணைக்கென தனிக்குழு அமைத்து கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கேரளாவில் முல்லைப் பெரியாறு அணைக்கு எதிராக எதிரெதிர் கட்சிகளும், அமைப்புகளும் களத்தில் ஒன்று சேர்ந்து போராடுகின்றன. ஆனால் இங்கு அதுபோன்ற நிலை இல்லை. ஆகவே ஆளும்கட்சி உள்ளிட்ட பல்வேறு கட்சிகளும், அமைப்புகளும் அணையின் முக்கியத்துவத்தை உணர்ந்து போராட்ட களத்துக்கு வர வேண்டும்.தொடர்ந்து அணைக்கு எதிராக செயல்பட்டால் இனி கேரளாவுக்குள் சென்று போராட்டம் நடத்துவோம். அணை கட்டுமானப்பணியிலே ஏராளமானோர் உயிரிழந்தனர். அதுபோல தற்போது அணையைக் காக்கவும் நாங்கள் உண்ணாவிரதம் இருந்து உயிரை விடத் தயங்க மாட்டோம் என்றனர்.

சலசலப்பு: அணையின் பாசனப்பகுதிகள் விலைநிலங்களாக மாறி வருவது குறித்த கேள்விக்கு நிர்வாகிகள் சிலர் ஒருமையில், கோபமாக பதிலளித்தனர். இதனைத்தொடர்ந்து அவர்களுக்கும், செய்தியாளர்களுக்கும் இடையே சலசலப்பு ஏற்பட்டது. போலீஸார் இருதரப்பையும் சமாதானப்படுத்தி அனுப்பினர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in