

‘ஜிபிஎஸ்’ போல நம் நாட்டின் வழிகாட்டுதல் பயன்பாட்டுக்கான என்விஎஸ்-02 செயற்கைக் கோள், ஜிஎஸ்எல்வி-எப்15 ராக்கெட் மூலம் ஜனவரி 29-ம் தேதி விண்ணில் செலுத்தப்படுகிறது.
அமெரிக்காவுக்கு ‘ஜிபிஎஸ்’ போல, நம் நாட்டில் தரை, கடல், வான்வழி போக்குவரத்து மற்றும் பாதுகாப்பு பயன்பாட்டுக்கு உதவும் ‘இந்திய மண்டல வழிகாட்டுதல் செயற்கைக் கோள் அமைப்பு’ (ஐஆர்என்எஸ்எஸ்) உருவாக்க இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் (இஸ்ரோ) முடிவு செய்தது. இதற்காக ஐஆர்என்எஸ்எஸ் வரிசையில் 2013 முதல் 2018-ம் ஆண்டு வரையான காலகட்டங்களில் 8 வழிகாட்டுதல் செயற்கைக் கோள்கள் வெற்றிகரமாக விண்ணில் நிலைநிறுத்தப்பட்டன. இதன்மூலம் இந்தியாவுக்கு பிரத்யேக வழிகாட்டியாக ‘நாவிக்’ தொழில்நுட்பம் வடிவமைக்கப்பட்டு செயல்பாட்டில் உள்ளது. இந்த நாவிக் மூலம்தான் நமது நாட்டின் கண்காணிப்பு பணிகள் சிறப்பாக மேற்கொள்ளப்படுகின்றன.
இதையடுத்து, ஐஆர்என்எஸ்எஸ் திட்டத்தில் மேம்படுத்தப்பட்ட செயற்கைக் கோள்களை விண்ணில் நிலைநிறுத்த இஸ்ரோ திட்டமிட்டது. அந்த வகையில், ஐஆர்என்எஸ்எஸ்-1ஜி-க்கு மாற்றாக என்விஎஸ்-01 செயற்கைக் கோள் கடந்த 2023 மே 29-ம் தேதி விண்ணில் நிலைநிறுத்தப்பட்டது. இதைத் தொடர்ந்து, தற்போது ஐஆர்என்எஸ்எஸ்-1இ செயற்கைக் கோளுக்கு மாற்றாக அதிநவீன என்விஎஸ்-02 செயற்கைக் கோளை இஸ்ரோ வடிவமைத்துள்ளது.
ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள 2-வது ஏவுதளத்தில் இருந்து ஜிஎஸ்எல்வி-எப்15 ராக்கெட் மூலம் என்விஎஸ்-02 செயற்கைக் கோள் வரும் 29-ம் தேதி அதிகாலை 6.23 மணிக்கு விண்ணில் செலுத்தப்பட உள்ளது. இதற்கான இறுதிகட்ட பணிகளில் இஸ்ரோ விஞ்ஞானிகள் ஈடுபட்டுள்ளனர்.
என்விஎஸ் செயற்கைக் கோள் 2,250 கிலோ எடை கொண்டது. இதன் ஆயுள்காலம் 10 ஆண்டுகள். இதில் எல்-1, எல்-5, மற்றும் எஸ் பேண்ட் டிரான்ஸ்பாண்டர்கள், உள்நாட்டு தொழில்நுட்பத்தில் தயாரான அணு கடிகாரம் உள்ளிட்ட பல்வேறு அதிநவீன தொழில்நுட்ப கருவிகள் இடம்பெற்றுள்ளன. இது மற்ற செயற்கைக் கோள்களுடன் சேர்ந்து தரை, கடல், வான்வழி போக்குவரத்தை கண்காணிக்கும். பேரிடர் காலங்களில் துல்லிய தகவல்களை தெரிவிக்கும். வரும் 29-ம் தேதி இந்த ராக்கெட் ஏவுதலை பார்வையிட விரும்பும் பொதுமக்கள் https://lvg.shar.gov.in/VSCREGISTRATION/index.jsp எனும் வலைதளம் வழியாக துரிதமாக முன்பதிவு செய்துகொள்ள வேண்டும் என்று இஸ்ரோ தெரிவித்துள்ளது.