வேங்கைவயல் விவகாரத்தை அரசியலாக்க வேண்டாம்: சென்னை உயர் நீதிமன்றம் அறிவுரை

வேங்கைவயல் விவகாரத்தை அரசியலாக்க வேண்டாம்: சென்னை உயர் நீதிமன்றம் அறிவுரை
Updated on
2 min read

சென்னை: வேங்கைவயல் வழக்கில் காவல் துறை விசாரணை நடத்தி கீழமை நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ள நிலையில், இந்த விவகாரத்தை அரசியலாக்க வேண்டாம் என மனுதாரர்களுக்கு சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. மேலும், குற்றப்பத்திரிகை மீது அதிருப்தி இருந்தால் கீழமை நீதிமன்றத்தை அணுகலாம் என்றும் கூறியுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம், வேங்கைவயல் கிராமத்தில் குடிநீர் தொட்டியில் மனிதக்கழிவு கலந்த விவகாரம் தொடர்பாக சிபிஐ விசாரணை கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன. கடந்த 2022-ம் ஆண்டு டிசம்பர் மாதம் நடந்த இந்த சம்பவம் தொடர்பாக சிபிசிஐடி போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். சம்பவம் குறித்து விசாரிக்க உயர் நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி எம்.சத்தியநாராயணன் தலைமையில் ஒரு நபர் ஆணையத்தை அமைத்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

இந்நிலையில், நீண்ட நாட்களுக்கு பின் இந்த வழக்கு தலைமை நீதிபதி ஶ்ரீராம் மற்றும் நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அமர்வில் இன்று (ஜன.24) விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர்கள் தரப்பில், “சம்பவம் நடந்து இரண்டு ஆண்டுகளுக்கு மேலாகியும் இதுவரை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படவில்லை” என தெரிவிக்கப்பட்டது. இதை மறுத்த தமிழக அரசின் கூடுதல் தலைமை வழக்கறிஞர் ரவீந்திரன், “வழக்கின் விசாரணை முடிவடைந்து முரளிராஜா, சுதர்சன் மற்றும் முத்துகிருஷ்ணன் ஆகியோருக்கு எதிராக ஜனவரி 20-ம் தேதி புதுக்கோட்டை சிறப்பு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது” என்றுகூறி அறிக்கை தாக்கல் செய்தார்.

அதில், “சிபிசிஐடி போலீஸார் நடத்திய விசாரணையில், வேங்கைவயல், இறையூர் கிராமங்கள் அடங்கிய முடுக்காடு பஞ்சாயத்து தலைவராக உள்ள பத்மா முத்தையா, குடிநீர் தொட்டி ஆபரேட்டர் சண்முகத்தை பணி நீக்கம் செய்ததால், பஞ்சாயத்து தலைவரின் கணவரை பழிவாங்கும் வகையில், குடிநீரில் நாற்றம் வருவதாக முரளிராஜா என்பவர் பொய் தகவலை பரப்பியதாகவும், அதன்பின் குடிநீர் தொட்டி மீது ஏறிய முத்துகிருஷ்ணன் மற்றும் சுதர்சன் ஆகியோர் இத்தகைய குற்றச் செயலில் ஈடுபட்டுள்ளனர்” என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. இதையடுத்து, இந்த வழக்கு பிற்பகலுக்கு ஒத்திவைக்கப்பட்டிருந்தது.

வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, மனுதாரர்கள் தரப்பில், இவ்வழக்கு தொடர்பாக புதுக்கோட்டை சிறப்பு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது சரி என்றும், குற்றப்பத்திரிக்கையில் வன்கொடுமை தடுப்புச் சட்ட பிரிவுகளின் கீழ் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படவில்லை என்றும், அரசின் இந்த அறிக்கைக்கு விரிவான பதிலளிக்க அவகாசம் வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டது.

இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதிகள், காவல் துறை விசாரணை நடத்தி கீழமை நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ள நிலையில், இந்த விவகாரத்தை அரசியலாக்க வேண்டாம் என மனுதாரர்களுக்கு அறிவுறுத்தினர். குற்றப்பத்திரிகை மீது அதிருப்தி இருந்தால் கீழமை நீதிமன்றத்தை அணுகலாம். அரசுத் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கைக்கு மார்ச் 10-ம் தேதிக்குள் பதிலளிக்க மனுதாரர் தரப்புக்கு உத்தரவிட்டு, விசாரணையை மார்ச் 27-ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in