Published : 22 Jan 2025 09:26 AM
Last Updated : 22 Jan 2025 09:26 AM

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்: பலமிருந்தும் பயத்தில் ஒதுங்கியதா பாஜக?

அதிமுக-வுடன் சேர்ந்து பாஜக-வும் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலை புறக்கணித்திருப்பது பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது. 2023-ல் ஈரோடு கிழக்கு இடைத்​தேர்​தலிலேயே பாஜக வேட்பாளர் நிறுத்​தப்​படலாம் என பேச்சு இருந்தது. ஆனால், கடைசி நேரத்தில் அதிமுக-வுக்கு ஆதரவு தெரிவித்து ஒதுங்கிக் கொண்டது பாஜக.

விக்கிர​வாண்டி இடைத்​தேர்​தலிலும் பாமக-வை களமிறக்​கி​விட்டு கப் சிப் ஆகிவிட்டது. ஆனால், இம்முறை ஈரோடு கிழக்கில் அண்ணா​மலையே போட்டி​யிடலாம் என்ற செய்தி ஆரம்பத்​திலேயே அடிபட்டது. களத்தில் அதிமுக இல்லை என்றதும், அண்ணாமலை இறங்கினால் ஆடிப் பார்த்து​விடலாம் என்ற பேச்சுக்கள் இன்னும் பலமாக ஒலித்தன.

பாஜக-வின் இந்த எண்ணவோட்​டத்தை ‘ஸ்மெல்’ செய்த திமுக தரப்பு தடாலடி முடிவை எடுத்தது. காங்கிரஸ் போட்டி​யிட்டால் பாஜக கடும் போட்டியை உண்டாக்​கும். இது திமுக ஆட்சிக்கு சங்கடத்தை உண்டாக்கும் எனக் கணக்குப்​போட்டது திமுக. அதனால், நேரடியாக டெல்லிக்கே பேசி தொகுதியை தங்களுக்கு எடுத்துக் கொண்டது திமுக. இதை எதிர்​பார்க்காத பாஜக, வேறு வழியில்​லாமல் அதிமுக வழியில் ஜகா வாங்கியது.

பாஜக-வின் இந்த முடிவு அக்கட்சி தொண்டர்களை சோர்வடைய வைத்துள்ளது. தமிழகத்தில் உண்மையான எதிர்க்​கட்சி நாம்தான் என பாஜக-​வினர் மனதில் ஆழமாக பதியவைத்து​விட்டார் அண்ணாமலை. அப்படி இருக்கை​யில், அதிமுக புறக்​கணித்த இடைத்​தேர்தல் களத்தை நாம் பயன்படுத்திக் கொள்வதுதானே சரியாக இருந்​திருக்கும் என்பது பாஜக-​வினரின் ஆதங்கம். பாஜக-வுக்கு செல்வாக்கான கொங்கு மண்டலத்தில் நடக்கும் இடைத்​தேர்தலை அந்தக் கட்சி பயன்படுத்திக் கொள்ளாமல் விட்டது ஏன் என்ற கேள்வியை அரசியல் விமர்​சகர்​களும் எழுப்பு​கின்​றனர்.

ஈரோடு கிழக்கில் களமிறங்கி இருந்தால் சுமார் ஒரு மாத காலத்​துக்கு கட்சி ‘லைம் லைட்’டில் இருந்​திருக்​கும். ஓரளவு கணிசமான வாக்குகளை வாங்கி​யிருந்தாலே மக்களின் கவனத்​தையும் பெற்றிருக்​கலாம். இன்னும் ஓராண்டில் பொதுத்​தேர்தலை எதிர்​கொள்ள​விருக்கும் சூழலில், இது கட்சிக்கும் பெரும் ஊக்கமாக இருந்​திருக்கும் என்ற விவாதங்​களும் பாஜக-வுக்குள் நடக்கின்றன.

நாராயணன் திருப்பதி

இந்த நிலையில், திமுக-வுக்கு பயந்து இடைத்​தேர்தலை புறக்​கணித்ததா பாஜக என்ற கேள்விக்கு பதிலளித்த அக்கட்​சியின் துணை தலைவர் நாராயணன் திருப்பதி, “அப்படி​யானால் காங்கிரஸ் எங்களுக்கு பயந்து போட்டி​யிட​வில்லையா என கேட்க வேண்​டும். கடந்த முறை கூட்டணி சார்பாக அதிமுக-வை நிறுத்த முடிவு செய்தோம். விக்கிர​வாண்​டியில் ஏற்கெனவே பாமக போட்டி​யிட்​டதால் அக்கட்சியே போட்டி​யிட்டது. கடந்த இடைத்​தேர்​தலில் சர்வா​திகார திமுக அரசு பெரும் அதிகார துஷ்பிரயோகம் செய்தது.

மக்களை ஆடுகளை அடைப்பதை போல பட்டியில் அடைத்து​வைத்து, அடிமைகளை போல நடத்திய கொடுமைகளை பார்த்​தோம். வார்டுக்கு ஒரு அமைச்​சரை​யும், தெருவுக்கு ஒரு எம்எல்​ஏ-வையும் போட்டு பணத்தை வாரியிறைத்​தனர். இந்தமுறை அதைவிட மோசமாக செய்வார்கள்.

எனவே இந்தக் கொடுமைகளை மக்களுக்கு எடுத்​துரைக்கவே புறக்​கணித்​தோம். நாங்கள் ஏன் இத்தேர்தலை புறக்​கணித்தோம் என்பதை மக்கள் உணர்ந்​துள்ளனர். மற்றபடி யாரைப் பார்த்தும் எங்களுக்கு பயமில்லை” என்றார். “2026-ல் திமுக-வை வீழ்த்து​வோம்; தமிழகத்தில் கூட்டணி ஆட்சியை அமைப்​போம்” எனச் சொல்லி வரும் பாஜக, இடைத்​தேர்தலை புறக்​கணிக்க நிஜமான ​காரணம் என்னவென்பது அந்த அண்ணா​மலைக்கே வெளிச்​சம்​!

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x