

மதுரை: தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்ட தலைமைமருத்துவமனைகளிலும் எம்ஆர்ஐ ஸ்கேன் வசதி ஏற்படுத்தவேண்டும் என 2017-ல் பொதுநல வழக்கு ஒன்றில் மதுரை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்தது. ஆனாலும், அனைத்து அரசுமருத்துவமனைகளிலும் சிடி ஸ்கேன், எம்ஆர்ஐ ஸ்கேன் வசதிஇதுவரை ஏற்படுத்தப்படவில்லை.
அரசு மருத்துவமனைகளில் சிடி மற்றும் எம்ஆர்ஐ ஸ்கேன் இயந்திரங்களை நிறுவி, அவற்றைச் செயல்படுத்தும் பணிகளை தமிழ்நாடு மருத்துவ சேவைக் கழகம் நிர்வகித்து வருகிறது. அரசு மருத்துவமனைகளில் இதுவரை 133 சிடி ஸ்கேன், 42 எம்ஆர்ஐ ஸ்கேன்கள் நிறுவப்பட்டுள்ளன. சிடி ஸ்கேன் எடுக்க ரூ.500, எம்ஆர்ஐ ஸ்கேன் எடுக்க ரூ.2,500 கட்டணம் வசூலிக்கப்படுகிறது. மக்கள் இந்த இருஸ்கேன்களையும் மருத்துவக்காப்பீடு மூலம் எடுக்க நடைமுறைச் சிக்கல் உள்ளதால், பலரும் பணம் செலுத்தியே ஸ்கேன் எடுக்கின்றனர்.
இவ்வாறு பெறப்பட்ட கட்டணம் மூலம் கடந்த 5 ஆண்டுகளில்ரூ.511 கோடி வருவாய், தமிழ்நாடு மருத்துவ சேவைக் கழகத்துக்கு கிடைத்துள்ளது. 2019-20நிதியாண்டில் ரூ.72 கோடி கிடைத்த நிலையில், 2023-24 நிதியாண்டில் மட்டும் ரூ.139 கோடியாக வருவாய் அதிகரித்துள்ளதாக மதுரை கே.கே.நகரை சேர்ந்தசுகாதாரச் செயல்பாட்டாளர் வெரோனிகா மேரி, தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் தகவல் பெற்றுள்ளார்.
இதுகுறித்து அவர் கூறும்போது, “அனைத்து அரசு மாவட்டதலைமை மருத்துவமனைகளிலும் ஸ்கேன் மையங்களை நிறுவுவதால், தமிழ்நாடு மருத்துவ சேவைக்கழகத்துக்கு நஷ்டம் ஏற்பட வாய்ப்பே இல்லை. உசிலம்பட்டி, பெரியகுளம், காரைக்குடி, கோவில்பட்டி, பத்மநாபபுரம், அறந்தாங்கி, மணப்பாறை, கும்பகோணம் உள்ளிட்ட பல மாவட்ட மருத்துவமனைகளில் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்து 7 ஆண்டுகள் கடந்தும் இவை பயன்பாட்டுக்கு வரவில்லை” என்றார்.
ரூ.6 கோடி வரை செலவாகும்... இது தொடர்பாக வெரோனிகா மேரி அனுப்பிய கோரிக்கைமனுவுக்கு தமிழ்நாடு மருத்துவ சேவைக் கழகம் அளித்த பதிலில், “எம்ஆர்ஐ ஸ்கேன் நிறுவ ரூ.6 கோடி வரை செலவாகும். தமிழக அரசிடமிருந்து எவ்வித நிதியும் வழங்கப்படுவதில்லை. உள் மாவட்ட மருத்துவமனைகளில் இல்லாவிட்டாலும், மாவட்ட தலைமையிடங்களில் உள்ள மருத்துவமனைகளில் எம்ஆர்ஐ ஸ்கேன் வசதி உள்ளது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.