ஊரக வளர்ச்சித் துறை மூலம் மேற்கொள்ளப்படும் திட்டப் பணிகள்: கரசங்காலில் நாடாளுமன்ற நிலை குழுவினர் ஆய்வு

ஊரக வளர்ச்சித் துறை மூலம் மேற்கொள்ளப்படும் திட்டப் பணிகள்: கரசங்காலில் நாடாளுமன்ற நிலை குழுவினர் ஆய்வு
Updated on
1 min read

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்தூர் ஊராட்சி ஒன்றியம், கரசங்கால் மற்றும் எழிச்சூர் ஊராட்சியில் ஊரக வளர்ச்சித் துறையின் மூலம் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் தொடர்பாக நாடாளுமன்ற நிலைக் குழுவினர் நேற்று ஆய்வு செய்தனர்.

காஞ்சிபுரம் மாவட்டம், குன்றத்தூர் ஊராட்சி ஒன்றியம், கரசங்கால், எழிச்சூர் ஊராட்சியில் ஊரக வளர்ச்சித் துறை மூலம் பல்வேறு நலத்திட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன. நாடாளுமன்ற நிலைக் குழு தலைவர் மற்றும் ஒடிசா மாநிலத்தின் கோராபுட் தொகுதி எம்.பி. சப்தகிரி சங்கர் உலகா தலைமையில் நாடாளுமன்ற நிலைக் குழு உறுப்பினர்கள் பஜன் லால் ஜாதவ், நபா சரண் மாஜி, ஜனார்த்தன மிஸ்ரா, கீதா என்கிற சந்திரபிரபா, வைகோ, சண்டிபன்ராவ் பும்ரே, சஞ்சய் ஜெஸ்வால், ஜூகால் கிஷோர், இம்ரான் மசூத், ஸ்ரீதேவேந்திரசிங் என்கிற போலே சிங் ஆகியோர், நலத்திட்ட பணிகள் நடைபெறும் இடங்களை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர்.

கரசங்கால் ஊராட்சியில் ரூ.9.99 லட்சம் மதிப்பில் ஒன்றில அளவிலான நாற்றங்கால் பண்ணையை ஆய்வு செய்தனர். இதனைத் தொடர்ந்து மண்புழு உரக் கூடம், எழிச்சூரில் பிரதம மந்திரி ஜன்மன் வீடு கட்டம் திட்டம் ஆகியவற்றை ஆய்வு செய்தனர்.

இந்த ஆய்வின்போது ஊரக வளர்ச்சித் துறை அரசு தலைமை கூடுதல் செயலர் ககன்தீப்சிங் பேடி, ஊரக வளர்ச்சித் துறை ஆணையர் பி.பொன்னையா, காஞ்சிபுரம் ஆட்சியர் கலைச்செல்வி, ஊரக வளர்ச்சித் துறை கூடுதல் இயக்குநர் கே.குமார் உட்பட பலர் பங்கேற்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in