துப்பாக்கி குண்டு காயத்துக்கு அறுவை சிகிச்சை முடிந்தது: ரவுடி பாம் சரவணன் கைதிகள் வார்டுக்கு மாற்றம்

துப்பாக்கி குண்டு காயத்துக்கு அறுவை சிகிச்சை முடிந்தது: ரவுடி பாம் சரவணன் கைதிகள் வார்டுக்கு மாற்றம்
Updated on
1 min read

சென்னை: போலீஸார் சுட்டதில் காயமடைந்த ரவுடி பாம் சரவணன் அறுவை சிகிச்சை முடிந்து கைதிகள் வார்டுக்கு மாற்றப்பட்டார்.

சென்னை புளியந்தோப்பை சேர்ந்தவர் பாம் சரவணன். இவர் மீது 6 கொலை வழக்குகள், 6 கொலை முயற்சி வழக்குகள், வெடிகுண்டு வீச்சு மற்றும் ஆயுதங்கள் பயன்படுத்திய வழக்குகள் என 30-க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன. மேலும், நீதிமன்ற பிடியாணை வழக்குகளும் நிலுவையில் உள்ளன.

கடந்த 6 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்து வந்த பாம் சரவணனை போலீஸார் தீவிரமாக தேடி வந்தனர். இந்நிலையில், கடந்த 14-ம் தேதி ஆந்திராவில் தனிப்படை போலீஸார் அவரை கைது செய்து சென்னைக்கு அழைத்து வந்தனர். தொடர்ந்து, வியாசர்பாடியில் அவர் பதுக்கி வைத்திருந்த நாட்டு வெடிகுண்டு, ஆயுதங்களை பறிமுதல் செய்ய அவரை அன்று இரவு அங்கு அழைத்துச் சென்றனர்.

அப்போது, திடீரென போலீஸாரைத் தாக்கிய பாம் சரவணன், அவர்களை நோக்கி நாட்டு வெடிகுண்டுகளை வீசிவிட்டு தப்ப முயன்றார். இதனால், போலீஸார் அவரை சுட்டுப்பிடித்தனர். இதில் பாம் சரவணனின் காலில் குண்டு பாய்ந்தது. இதையடுத்து, அவரிடமிருந்து 4 நாட்டு வெடிகுண்டுகள், 5 கிலோ கஞ்சா, அரிவாள், கத்தியை போலீஸார் பறிமுதல் செய்தனர். பின்னர் அவரை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் போலீஸார், சிகிச்சைக்காக சேர்த்தனர்.

இந்நிலையில் ஸ்டான்லி மருத்துவமனையில், துப்பாக்கி குண்டு பாய்ந்து காயமடைந்த பாம் சரவணனுக்கு அறுவை சிகிச்சை முடிக்கப்பட்டு, நேற்று கைதிகள் வார்டுக்கு மாற்றப்பட்டார். சிகிச்சை முடிந்து, புழல் மத்திய சிறைக்கு அவர் அடைக்கப்படுவார் என போலீஸார் தெரிவித்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in