2026 பேரவை தேர்தல்தான் இலக்கு: இடைத்தேர்தல் புறக்கணிப்பு குறித்து தவெக சொல்வது என்ன?

2026 பேரவை தேர்தல்தான் இலக்கு: இடைத்தேர்தல் புறக்கணிப்பு குறித்து தவெக சொல்வது என்ன?
Updated on
1 min read

சென்னை: ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலைப் புறக்கணிப்பதாகவும், அதில் எந்தக் கட்சிக்கும் ஆதரவு கிடையாது என்றும் தவெக பொதுச் செயலாளர் புஸ்ஸி என்.ஆனந்த் அறிவித்துள்ளார். காங்கிரஸ் எம்எல்ஏ ஈவிகேஎஸ்.இளங்கோவன் மறைவை அடுத்து, ஈரோடு கிழக்கு சட்டப்பேரவை தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டு, வரும் பிப். 5-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்த இடைத்தேர்தலை அதிமுக, பாஜக, தேமுதிக கட்சிகள் புறக்கணித்த நிலையில், இண்டியா கூட்டணி சார்பில் திமுக வேட்பாளர் களமிறங்கியுள்ளார். நாம் தமிழர் கட்சி தனித்துப் போட்டியிடுகிறது.

இந்நிலையில், தமிழக வெற்றிக் கழகமும் இடைத்தேர்தலைப் புறக்கணித்துள்ளது. இது தொடர்பாக அக்கட்சியின் பொதுச் செயலாளர் புஸ்ஸி என்.ஆனந்த நேற்று வெளியிட்ட அறிக்கை யில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் வரும் 2026-ல் நடைபெறும் சட்டப்பேரவை பொதுத்தேர்தல்தான் இலக்கு என்றும், இடைப்பட்ட காலத்தில் நடைபெறும் உள்ளாட்சித் தேர்தல் உட்பட எந்த தேர்தலிலும் போட்டியிடப் போவதில்லை என்றும் தவெக கட்சி ஆரம்பித்த முதல் நாள் அறிக்கையிலே கட்சித் தலைவர் விஜய் திட்டவட்டமாகத் தெரிவித்திருந்தார்.

இதுமட்டுமின்றி, ஆளும் அரசுகள் ஜனநாயக மரபுகளைப் பின்பற்றாமல், அதிகார பலத்தைக் கொண்டு இடைத்தேர்தல்களில் வெற்றிபெறுவது கடந்தகால வரலாறாக இருக்கிறது. அதனடிப்படையில், நடந்து முடிந்த விக்கிரவாண்டி இடைத்தேர்தலைப் போலவே, வரும் பிப்.5-ம் தேதி நடைபெறும் ஈரோடு இடைத்தேர்தலை தவெக புறக்கணிப்பதுடன், எந்தக் கட்சிக்கும் ஆதரவு கிடையாது என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in