செங்கல்பட்டு - சித்தாமூர் ஊர்ப்புற நூலக கட்டிடம் சேதம்

சித்தாமூரில் சேதமடைந்த கட்டிடத்தில் செயல்பட்டு வரும் ஊர்ப்புற நூலகம்.
சித்தாமூரில் சேதமடைந்த கட்டிடத்தில் செயல்பட்டு வரும் ஊர்ப்புற நூலகம்.
Updated on
1 min read

செங்கல்பட்டு மாவட்டம் செய்யூர் அருகே அமைந்துள்ள சித்தாமூர் வட்டார வளர்ச்சி அலுவலக வளாகத்துக்குள், செங்கல்பட்டு மாவட்ட நூலக ஆணைய குழுவின் சார்பில் ஊர்ப்புற நூலகம் ஒன்று செயல்பட்டு வருகிறது. தற்போது, நூலகம் செயல்பட்டு வரும் கட்டிடம் பழுதடைந்து பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது. மேலும், கடந்த சில நாட்களாக பெய்த மழையில் கட்டிடம் முழுவதும் தண்ணீரில் ஊறி, சுவர்கள் முழுவதும் நீர் ஊற்றெடுத்து வருகிறது. மேலும், நூலக கட்டிடத்தினுள் கடுமையான துர்நாற்றம் வீசுகிறது. இதனால், அரிய வகையான நூல்கள் வீணாகும் நிலை ஏற்பட்டுள்ளது.

நூலகத்தின் மேற்கூரையின் மீது பாசி படிந்து செடி, கொடிகள் வளர்ந்திருப்பதால் பராமரிப்பின்றி கட்டிடம் முழுவதும் சேதமடைந்துள்ளது. மேலும், நூலகத்துக்கு வந்துள்ள புதிய புத்தகங்களை அடுக்கி வைக்கக்கூட இடமில்லாததால், மூட்டைகளாக கட்டி வைக்கப்பட்டுள்ளன. இதனால், புத்தகங்கள் வாசிக்கப்படாமலேயே பாழாகும் அவலம் ஏற்பட்டுள்ளது. இதனால், நூலகத்துக்கு புதிய கட்டிடத்தை கட்டித் தர வாசகர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

இதுகுறித்து, நூலகத்துக்கு வரும் வாசகர்கள் கூறியதாவது: மாவட்டத்தின் தலைநகரிலிருந்து கடைக்கோடியில் உள்ள கிராமப்புறங்களை சேர்ந்த மாணவ, மாணவிகள் மற்றும் கல்லூரி மாணவர்கள் இந்த நூலகத்தை பயன்படுத்துகின்றனர். தற்போது இயங்கிவரும் நூலக கட்டிடம் பழுதடைந்து பல மாதங்களாகிறது. அதனால், நூலகத்துக்குள் அமர்ந்து புத்தகங்களை வாசிக்க அச்சமாக உள்ளது. மேலும், பல்வேறு தலைப்புகளில் உள்ள ஆயிரத்துக்கும் மேற்பட்ட புத்தகங்கள் இட நெருக்கடி மற்றும் சேதமடைந்த கட்டிடத்தால் வீணாகும் அவலம் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து, உயர் அதிகாரிகளிடம் பலமுறை தெரிவித்தும் உரிய நடவடிக்கையில்லை என்றனர்.

இதுகுறித்து, சமூக ஆர்வலர் ராமமூர்த்தி கூறியதாவது: சித்தாமூர் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் மற்றும் இளைஞர்கள், மேற்கண்ட நூலகத்தை பெரிதும் பயன்படுத்தி வருகின்றனர்.அதேபோல், நூலகத்துக்கு ஏராளமானோர் புத்தகங்களை கொடையாக வழங்கியுள்ளனர்.

ஆனால், கட்டிடம் சேதமடைந்துள்ளதால் இங்குள்ள புத்தகங்கள் மழைநீரில் நனைந்து சேதமடையும் அபாயம் உள்ளது. மேலும், சேதமடைந்த கட்டிடம் குறித்து மாவட்ட நூலக நிர்வாகத்துக்கும், மாவட்ட ஆட்சியரிடமும் பலமுறை முறையிட்டுள்ளோம். புத்தகம் வாசிப்போரின் நலன் கருதி பல்வேறு அடிப்படை வசதிகளுடன் கூடிய நூலக கட்டிடத்தை கட்டித் தர உயர் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in