

கோவை: கோவை உப்பிலிபாளையத்தில் கேஸ் டாங்கர் லாரி விபத்துக்குள்ளான இடத்தில் மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி, மாநகராட்சி ஆணையர் சிவகுரு பிரபாகரன் உள்ளிட்டோர் ஆய்வு செய்தனர்.
தொடர்ந்து ஆட்சியர் கிராந்திகுமார் பாடி செய்தியாளர்களிடம் கூறும்போதூ, “எந்த அசம்பாவிதமும் நடக்கமால் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. முதற்கட்டமாக வாயுக் கசிவை நிறுத்தியுள்ளோம்.
திருச்சியிலிருந்து டேங்கர் லாரி தயாரிக்கும் நிறுவனத்திலிருந்து டீம் வரவழைக்கப்பட்டுள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அருகில் உள்ள 10 பள்ளிகளுக்கு விடுப்பு வழங்கப்பட்டுள்ளது. 2 லிருந்து 3 மணி நேரத்தில் டேங்கர் லாரியை அப்புறபடுத்தும் பணியாணது நிறைவு பெறும் என நினைக்கிறோம். போக்குவரத்தை சீர் செய்யும் பணியில் காவலர்கள் ஈடுபட்டுள்ளார்கள்.
இந்த விபத்து நடந்தது குறித்து ஆர்.டி.ஓ மற்றும் காவல்துறையினர் விசாரணை நடத்தினால் தான் இந்த விபத்து எப்படி நடந்தது என்று தெரியவரும்” என்றார்.
முன்னதாக, கேரள மாநிலம் கொச்சியிலிருந்து கேஸ் டேங்கர் லாரி இன்று (வெள்ளிக்கிழமை) அதிகாலை கோவை நோக்கி வந்து கொண்டிருந்தது. அந்த டேங்கரில் 18 டன் எல்பிஜி கேஸ் இருந்தது. கோவை அவிநாசி சாலையில் உள்ள பழைய அண்ணா மேம்பாலத்தின் மீது இந்த லாரி இன்று அதிகாலை 3 மணியளவில் உப்பிலிபாளையம் நோக்கி செல்லும் வழித்தடத்தில் திரும்ப முயன்றது. அப்பொழுது இந்த லாரியில் இருந்த இணைப்பு பகுதி துண்டிக்கப்பட்டு, பின்னால் இருந்த எரிவாயு டேங்கர் கீழே உருண்டு விழுந்து விபத்துக்குள்ளானது. தற்போது மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன.