எப்ஐஆர் கசிந்தது தொடர்பாக தேசிய தகவல் மையத்தையும் விசாரிக்க வேண்டும்: கே.பாலகிருஷ்ணன் வலியுறுத்தல்

எப்ஐஆர் கசிந்தது தொடர்பாக தேசிய தகவல் மையத்தையும் விசாரிக்க வேண்டும்: கே.பாலகிருஷ்ணன் வலியுறுத்தல்
Updated on
1 min read

முதல் தகவல் அறிக்கை விவரங்கள் கசிந்த விவகாரத்தில் தேசிய தகவல் மையத்தையும் விசாரணை வளையத்துக்குள் கொண்டு வந்து விசாரிக்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தி உள்ளது.

இதுகுறித்து, கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வெளியிட்ட அறிக்கை: பாலியல் வன்கொடுமை குறித்த முதல் தகவல் அறிக்கை விவரங்கள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. சென்னை உயர் நீதிமன்றமும், பல அமைப்புகளும் இதுதொடர்பாக கடுமையாக எதிர்வினையாற்றின. இந்நிலையில், முதல் தகவல் அறிக்கை வெளிவந்த குற்றத்துக்கு மத்திய அரசின் தேசிய தகவல் மையமே காரணம் என்று அந்த முகமை விளக்கம் அளித்துள்ளது.

அதன்படி, புதிய குற்றவியல் சட்டங்களின் பிரிவுகளும், பெயரும் மாற்றப்பட்டிருக்கும் நிலையில் முதல் தகவல் அறிக்கை விபரங்களை மறைக்க முடியாமல் போனதாக தெரிவிக்கின்றன. அவ்வாறானால், புதிய குற்றவியல் சட்டங்கள் கடந்த ஜூலை மாதமே அமலுக்கு வந்துவிட்ட நிலையில் அப்போதிருந்து நடைபெற்ற எல்லா வழக்குகளிலும் பாதிக்கப்பட்டோர் விவரங்கள் இப்படி கசியவில்லையே. இந்த வழக்கில் மட்டும் விபரங்கள் எப்படி கசிந்தது என்ற கேள்வி எழுகிறது. எனவே, கடுமையான குற்றத்துக்கு காரணமான மத்திய தகவல் முகமை மீதும் வழக்கு பதிய வேண்டும்.

இந்த பாலியல் வன்கொடுமை வழக்கின் விவரங்களை வெளியிட்டு அரசியல் ஆதாயம் தேடும் சதி நோக்கம் உள்ளதா என்பதையும் விசாரிக்க வேண்டும். மேலும் மன உளைச்சலுக்கும், கடும் பாதிப்புக்கும் ஆளாகியுள்ள பெண்ணுக்கு உயர் நீதிமன்றத்தின் உத்தரவுப்படி நிவாரணத்தை தாமதமின்றி வழங்க வேண்டும். இவ்வாறு பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in