

தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள் மற்றும் பள்ளிகளில் மாணவிகளுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்வதை உறுதி செய்ய வேண்டும் என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை ஆளுநரிடம் கேட்டுக் கொண்டார்.
தமிழக வெற்றிக் கழக தலைவர் நடிகர் விஜய் நேற்று ஆளுநர் ஆர்.என்.ரவியை சந்தித்து மனு வழங்கிய நிலையில், மாணவி பாலியல் வழக்கு தொடர்பாக விசாரிக்க சென்னை வந்த தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர்களும் ஆளுநரை சந்தித்து ஆலோசனை நடத்தினர். இதனை தொடர்ந்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையும் நேற்று ஆளுநரை சந்தித்தார். சுமார் 20 நிமிடங்கள் நடைபெற்ற இந்த சந்திப்பின்போது மாணவி வழக்கு விசாரணை முறையாக நடைபெற நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினார்.
மேலும், இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட அனைவரையும் கைது செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், ‘யார் அந்த சார்’ என்ற விவகாரத்தில் தனிக் கவனம் செலுத்தி தீவிர விசாரணை மேற்கொண்டு, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் ஆளுநரை கேட்டுக்கொண்டார். அதுமட்டுமல்லாமல், அண்ணா பல்கலைக்கழகம் மட்டுமின்றி தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள், பள்ளிகளில் மாணவிகளுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்வதை உறுதி செய்ய வேண்டும் எனவும் இந்த சந்திப்பின்போது ஆளுநரை அண்ணாமலை வலியுறுத்தியதாக கூறப்படுகிறது.